விஜய கரிசல்குளம் 3ம் கட்ட அகழாய்வில் ஆவணப்படுத்தும் பணியில் கல்லுாரி மாணவர்கள்
சிவகாசி : விருதுநகர் மாவட்டம் விஜய கரிசல்குளம் 3ம் கட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பானை ஓடுகளை ஆவணப்படுத்தும் பணியில் கல்லுாரி மாணவர்கள் ஈடுபட்டனர்.விஜய கரிசல்குளத்தில் 3ம் கட்ட அகழாய்வில் இதுவரையிலும் உடைந்த நிலையில் சுடுமண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்ட காய்கள், பெண்ணின் தலைப்பகுதி, சூது பவள மணி என 1600 க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் அகழாய்வு பணிகளையும், கண்டெடுக்கப்பட்ட பொருட்களையும் பார்வையிடுவதற்காக ராஜபாளையம் ராஜூக்கள் கல்லுாரி வரலாற்றுத் துறை மாணவர்கள் வந்திருந்தனர். இவர்கள் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பானை ஓடுகளை பிரித்தெடுத்து ஆவணப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் பொன்னுச்சாமி கூறுகையில், அகழாய்வில் ஏராளமான உடைந்த நிலையில் பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கு வந்திருந்த கல்லுாரி மாணவர்கள் ஓடுகளை பிரித்தெடுக்கவும், ஆவணப்படுத்தவும் ஆர்வம் காட்டினர். மாணவர்களுக்கு இதுகுறித்து விளக்கி ஆவணப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள், ஓடுகளில் குறியீடு ஏதும் உள்ளதா என ஆய்வு செய்தனர். மாணவர்கள் கூறுகையில், அகழாய்வு பணிகளை பார்வையிட்டதை விட ஆவணப்படுத்தும் பணியில் ஈடுபட்டது மகிழ்ச்சியை தருகின்றது. மேலும் ஒவ்வொரு பொருட்களையும் எவ்வாறு கையாள்வது, அளவீடு செய்வது, ஆவணப்படுத்தப்படுவது என்பது குறித்து தெரிந்து கொண்டோம், என்றனர்.