உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நிழற்குடை சேதத்தால் வெளியே அமரும் அவலம் மாணவர்கள் தவிப்பு

நிழற்குடை சேதத்தால் வெளியே அமரும் அவலம் மாணவர்கள் தவிப்பு

விருதுநகர், : விருதுநகர் அருகே சத்திரரெட்டியபட்டி எதிரே கள்ளிக்குடி பிரிவு ரோடு பஸ் ஸ்டாப் சேதமடைந்துள்ளதால் அப்பகுதி பள்ளியில் படிக்கும் மாணவர்கள் வெளியே அமர்ந்துள்ள நிலை உள்ளது. வெயிலிலும், மழையிலும் சிரமப்படுகின்றனர்.விருதுநகர் அருகே சத்திரெட்டியபட்டி உள்ளது. இங்கு மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இதில் 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர். இம்மாணவர்களில் பெரும்பாலானோர் பஸ் மூலம் சென்று வரும் நிலை உள்ளது. இந்நிலையில் இதன் எதிரே நிழற்குடை உள்ளது. தற்போது சேதம் அடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மாணவர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.தற்போது மாலை நேரங்களிலே மழை பெய்து கொண்டிருப்பதால் நிழற்குடை சேதத்திற்கு அஞ்சி மாணவர்கள் வெளியே நிற்கின்றனர். பஸ்கள் வர தாமதமாகும் சூழல் வரை வெளியிலேயே நிற்கின்றனர். வெயில் அடிக்கும் போதும் இதே நிலை தான். இந்நிலையில் விரைவில் இந்த நிழற்குடையை இடித்து விட்டு புதிய நிழற்குடை கட்டப்பட உள்ளது. ஆனால் அது சற்று தள்ளி அமையவுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.அவ்வாறு அமைந்தால் மாணவர்கள் பஸ்சுக்காக ஓடி அலைக்கழிக்கப்படும் சூழல் ஏற்படும். சேதமான இந்த நிழற்குடையை இடித்து விட்டு இதே இடத்தில் புதிய நிழற்குடை கட்டினால் மட்டுமே மாணவர்களுக்கு பயன்படும். எனவே இதற்கு மாவட்ட நிர்வாகம் செவி சாய்த்து தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !