தாலுகா தோறும் ஆஞ்சியோ பரிசோதனை பட்ஜெட்டில் அறிவிக்க எதிர்பார்ப்பு
ஸ்ரீவில்லிபுத்துார்:தமிழகத்தில் அதிகரித்து வரும் மாரடைப்பு மரணங்களை தடுக்க தாலுகா தோறும் அரசு மருத்துவமனைகளில் ஆஞ்சியோ பரிசோதனை மையம் அமைக்க வேண்டும் என மருத்துவ துறையினர் எதிர்பார்க்கின்றனர். வாழ்க்கை சூழலில், உணவு முறை மாற்றத்தால் பலரும் இதய நோய் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். மாரடைப்பு ஏற்பட்டு அரசு மருத்துவமனைக்கு வருவோருக்கு உயிர் காக்கும் முதல் உதவி சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. பின்னர் மேல் சிகிச்சை பெற மருத்துவ கல்லூரிகள், மாவட்ட தலைமை மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுகின்றனர். மேல்சிகிச்சை பெறும் முன்பு ஆஞ்சியோ பரிசோதனை செய்ய வேண்டும். இதற்கு தனியார் மருத்துவமனைகளையே நாட வேண்டியுள்ளது. இதற்கு பல ஆயிரம் ரூபாய் செலவாகிறது. ஏழை, நடுத்தர மக்கள் சிரமப்படுகின்றனர். இதில் முதல்வர் காப்பீடு திட்ட பயனை பெறுவதிலும் சிக்கல் உள்ளது. இதை தவிர்க்க ஒவ்வொரு தாலுகா அரசு மருத்துவமனைகளிலும் ஆஞ்சியோ பரிசோதனை மையங்கள் அமைக்க வேண்டும் என அரசு டாக்டர்கள் கூறுகின்றனர். பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வெளியிட்டால் ஏழை, நடுத்தர மக்கள் பயனடைவர் என அவர்கள் கூறினர்.