| ADDED : மார் 23, 2024 05:05 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: தென்காசி தனி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டசபை தொகுதியில் துணை ராணுவ படையினர் ஓரிரு நாட்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டசபை தொகுதியில் ஒரு நகராட்சி, 2 ஊராட்சி ஒன்றியங்கள், 5 பேரூராட்சிகள் உள்ளது. இதில் மொத்தம் உள்ள 283 ஓட்டு சாவடி மையங்களில் 16 மையங்கள் பதட்டம் ஏற்படக்கூடிய ஓட்டு சாவடி மையங்களாக கண்டறியப்பட்டுள்ளது.இதனையடுத்து அம்மையங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும், எவ்வித பிரச்சனையும், மோதலும் இல்லாமல் தேர்தலை அமைதியாகவும், வெற்றிகரமாகவும் நடப்பதற்காக இதுவரை இல்லாத வகையில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.இதில் குறிப்பிட்ட அளவு துணை ராணுவ படையினர் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பகுதியிலும், மற்றவர்கள் வத்திராயிருப்பு தாலுகாவில் உள்ள பல்வேறு கிராம பகுதிகளிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.