பிரச்சனையும், தீர்வும் :
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை யில் உள்ள மாவட்ட அரசு தலைமை (தேசிய தரச் சான்று பெற்ற) இந்த மருத்துவமனைக்கு சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் சிகிச்சை பெற வருவர். கர்ப்பிணி பெண்களுக்கு இங்கு வந்தால் சுகப்பிரசவம் ஆவதால் ராசியான மருத்துவமனை என அருகில் உள்ள மாவட்டங்களை சேர்ந்த எல்லை பகுதி மக்களும் வருகின்றனர். அதிநவீன அறுவை சிகிச்சை பிரிவு, பிரசவ வார்டு, குழந்தைகளுக்கு என தனி பிரிவு, இன்குபேட்டர் வசதி, செயற்கை சுவாச கருவிகள்,விஷ தீவிர சிகிச்சை பிரிவு, லேப் உள்ளிட்ட பல வசதிகள் இங்கு உள்ளன. 2021ல், தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டபின்பும் உள்கட்டமைப்பு வசதிகள், கட்டடங்கள் பணி மந்தகதியில் நடப்பதால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். பிரச்சனை
மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்ட பிறகு 2023ல், ரூ.30 கோடி 30 லட்சம் செலவில் புதிய கட்டடங்கள் கட்டும் பணி துவங்கப்பட்டது. இதில் கூடுதலான படுக்கை வசதிகள் உள்ளிட்ட பிற வசதிகள் செய்யப்பட உள்ளன. பணிகள் மந்தகதியில் நடப்பதால் புதிய கட்டடம் மக்களின் பயன்பாட்டிற்கு எப்போது வரும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே உள்ள மற்ற கட்டடங்கள் ஒரு சில சேதம் அடைந்து உள்ளன. மருத்துவமனையில் உள்ள மார்ச்சுவரி கட்டடம் இடிந்து பல ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது செட் அமைத்து மார்ச்சுவரி இயங்கி வருகிறது. இதற்கு புதிய கட்டடம் இல்லாததால் பிண பரிசோதனையை சிரமப்பட்டு டாக்டர்கள் செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. மருத்துவமனையில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் வசதி இருந்தும் இதற்கான டாக்டர் இல்லாததால் இங்கு வரும் நோயாளிகள் தனியார் லேபில் அதிக கட்டணம் கொடுத்து பரிசோதனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் நோயாளிகளுக்கு டயாலிசிஸ் கை நரம்பிலிருந்து செய்யக்கூடிய வசதி தான் உள்ளது. நோயின் தாக்கம் அதிகமாக உள்ள நோயாளிகளுக்கு கழுத்து நரம்பின் மூலமாகத்தான் சிகிச்சை அளிக்க வேண்டும். இதனால் இது போன்ற நோயாளிகளை மதுரை அரசு மருத்துவமனைக்கு தான் அனுப்புகின்றனர். மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தியதால் கூடுதலாக பார்மசிஸ்ட்கள் நியமிக்கப்பட வேண்டும். பல்வேறு தடுப்பு ஊசிகள் இங்கு போடப்படுகின்றன. இதுகுறித்த அறிவிப்பு பலகை மருத்துவமனையில் இல்லை. எந்த வகையான தடுப்பூசி போடப்படுகிறது என மக்களுக்கு தெரிவதில்லை. ஆமை வேகத்தில் கட்டட பணிகள்
ஜெயராஜ், தனியார் ஊழியர்: அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு அதற்கான கட்டடப் பணிகள் இரண்டு ஆண்டுகளாக நடந்த நிலையில் முடிவடையாமல் உள்ளது. இதனால் கிராமப்புற மக்களும் நகர மக்களும் தங்கி சிகிச்சை பெற முடியாமல் அவதிப்படுகின்றனர். அவசரத்திற்கு விருதுநகர், மதுரை அரசு மருத்துவமனைக்கும் அனுப்புகின்றனர். டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. அல்ட்ரா ஸ்கேன் எடுப்பதற்கு கருவி இருந்தும் தனியார் லேப்பிற்கு செல்ல வேண்டியுள்ளது. மாவட்ட மருத்துவமனைக்கு உரிய வசதிகள் டாக்டர்கள் பணியாளர்களை அமர்த்த மருத்துவ நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதய நோய்களுக்கு தனி பிரிவு தேவை
சுரேஷ்குமார், தனியார் ஊழியர்: மாவட்ட மருத்துவமனையில் நரம்பியல் மருத்துவர் நியமிக்கப்படவில்லை. முடக்குவாத பிரிவு உருவாக்கப்பட வேண்டும். இருதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு தனிப்பிரிவு ஏற்படுத்த வேண்டும். மக்கள் தொகைக்கு ஏற்ப டாக்டர்களை நியமிக்க வேண்டும். அதிகமான கிராம மக்கள் சிறப்பு சிகிச்சைக்கு இந்த மருத்துவமனைக்கு வரும் நிலையில் கூடுதலான டாக்டர்கள் பணியில் இருக்க வேண்டும். கட்டட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.