உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஸ்டாக் வைக்கப்படும் மணி மருந்து பட்டாசு ஆலை விபத்திற்கு வாய்ப்பு

ஸ்டாக் வைக்கப்படும் மணி மருந்து பட்டாசு ஆலை விபத்திற்கு வாய்ப்பு

சிவகாசி:பட்டாசு ஆலைகளில் மணி மருந்து இருப்பு வைக்கப்பட்டு விதி மீறுவதால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், சிவகாசி, வெம்பக்கோட்டை, சாத்துார் பகுதியில் நாக்பூர், டி.ஆர்.ஓ., சென்னை உரிமம் பெற்ற 1080 பட்டாசு ஆலைகள் உள்ளன. ஆலைகளை குத்தகைக்கு விடுவதால் விதிகள் மீறப்பட்டு வெடி விபத்து ஏற்படுவது ஒரு பக்கம் இருக்க, ஆலைகளில் மணி மருந்து இருப்பு வைப்பதால் தொடர்ந்து வெடி விபத்து ஏற்படுகிறது.பொதுவாக பட்டாசு ஆலைகளில் பயன்படுத்தப்படும் மருந்து கலவைகளை அன்றே காலி செய்யப்பட வேண்டும். இருப்பு வைக்கக் கூடாது. மறுநாள் பட்டாசு உற்பத்தி பணி துவங்கும் போது புதிய மருந்துகள் கொண்டு வர வேண்டும். ஆனால் பெரும்பாலான பட்டாசு ஆலைகளில் மணி மருந்துகள் இருப்பு வைக்கப்படுகின்றது. மணி மருந்து இருப்பு வைக்கும் போது வேதியியல் மாற்றத்தினால் நீர்த்து வெடி விபத்து ஏற்படுகிறது. பல்லி, எலி போன்றவையால் மணிமருந்தில் உராய்வு ஏற்பட்டு வெடி விபத்துகளும் நிகழ்ந்துள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிவகாசி ஏழாயிரம் பண்ணை அருகே பட்டாசு ஆலையில் மணி மருந்து இருப்பு வைக்கப்பட்ட அறையை திறந்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் பலியானார். மேலும் நாரணாபுரம் புதுார், செங்கமலப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பட்டாசு ஆலைகளில் முதல் நாள் இருப்பு வைக்கப்பட்டிருந்த மணி மருந்து வைக்கப்பட்டிருந்த அறையை திறக்கும் போது வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. எனவே மருந்து கலவை இருப்பு குறித்து அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு நடத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை