| ADDED : ஜூன் 22, 2024 04:39 AM
மத்திய அரசு ஆதார் அட்டையை பத்தாண்டுகளுக்கு ஒரு முறை தங்களது போட்டோ, விரல் ரேகைகளை புதுப்பித்துக் கொள்ள வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. இதற்கு தாலுகா, கலெக்டர் அலுவலகங்களில் உள்ள இ-சேவை மையங்கள், குறிப்பிட்ட தபால் அலுவலகங்கள், வங்கிகளிலும் புதுப்பித்துக்கொள்ள உத்தரவிட்டுள்ளது. இதில் பெரும்பான்மையான மக்கள் முகவரி மாற்றம், பெயர் மாற்றம், பெயரில் உள்ள தவறுகளை திருத்தம் செய்தல், அலைபேசி எண் மாற்றம், புதிய ஆதருக்காக விண்ணப்பிப்பதற்காகவும் தாலுகா அலுவலக இ-சேவை மையம் மூலம் நிறைவேற்றிக் வருகின்றனர். இதனால் தாலுகா அலுவலக இ-சேவை மையத்திலும் மக்கள் அதிகளவில் காத்திருக்கும் நிலை உள்ளது. தற்போது வங்கி கடன் முதல் ரேஷன் கார்டு, காஸ் சிலிண்டர் வரை ஆதார் கார்டு அடையாள அட்டை போல பயன்படுத்தப்படுகிறது. பெயர் திருத்தம், முகவரி மாற்றம், பள்ளியில் சேர்க்கப்படும் மாணவர்களுக்காக புதிய ஆதார் அட்டை கேட்டு விண்ணப்பிப்பதற்கும் பலர் தாலுகா அலுவலர்களுக்கு அலைந்து திரியும் செல்லும் நிலை உள்ளது.பள்ளி மாணவர்களுக்கு ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் ஆதார் அட்டை எடுப்பதற்காக பள்ளியில் விடுமுறை எடுத்து மாணவர்கள் தாலுகா அலுவலகத்திற்கு வரும் நிலை உள்ளது.மேலும் ஐந்து வயதிற்கு முன்பு எடுத்த ஆதார் அட்டைக்கு மாற்றாக பத்து வயது கடந்த மாணவர்களும் புதிய ஆதார் அட்டைக்காக விண்ணப்பிக்க வேண்டிய நிலையில் தாலுகா அலுவலகங்களுக்கு வந்து செல்கின்றனர்.மேலும் தாலுகா அலுவலகங்களில் உள்ள இ-சேவை மையங்களில் இருவர் மட்டுமே இந்த பணிகளை செய்து வருகின்றனர். அதிக பணிச்சுமை ஏற்பட்டு அவர்கள் அவதிப்படும் நிலை உள்ளது. இதனால் ஆதார் இ--சேவை மையங்களில் பணி புரிபவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.இதை தவிர்க்க பிற மாவட்டங்களை போல ஊராட்சிகளில் ஆதார் சிறப்பு முகாம்களையும் நடத்தினால் மக்கள் தாங்கள் வாசிக்கும் இடத்திலேயே எளிதாக தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும்.இதன் மூலம் பொதுமக்களும் பயனடைவார்கள் தாலுகா அலுவலகங்களில் உள்ள ஆதார் இ-சேவை மையத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கும் பணிச்சுமை குறையும் எனவே மாவட்ட நிர்வாகம் ஊராட்சிகள் தோறும் ஆதார் இ-சேவை சிறப்பு திருத்த முகாம்களை நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.