காரியாபட்டி கண்மாயில் விலங்குகள் வேட்டை: பாதுகாப்பு கேள்விக்குறி
காரியாபட்டி: காரியாபட்டி பகுதியில் ஆறுகள், கண்மாய்களில் தஞ்சம் புகும் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதால் அவற்றின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவன விலங்கு ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். காரியாபட்டி பகுதியில் உள்ள குண்டாறு, தெற்காறுகளில் அடர்ந்த சீமை கருவேல மரங்கள், நாணல்கள் வளர்ந்து நிற்கின்றன. வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர் மலைப்பகுதிகளிலிருந்து மான்கள், முயல்கள், மயில்கள், காட்டு பன்றிகள் என ஏராளமான வனவிலங்குகள் இரை தேடி இடம் பெயர்ந்து இப்பகுதியில் தங்கி இனப்பெருக்கம் செய்து வருகின்றன. இரை தேடி விவசாய நிலங்கள், கண்மாய்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு இடம் பெயர்கின்றன. இதில் மெயின் ரோடுகளை கடக்க முற்படும்போது வாகன விபத்துகளில் சிக்கி பல பலியாகின்றன. திருச்சுழி, நரிக்குடி, காரியாபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றித் திரியும் மான்கள், மயில்கள், முயல்கள் சரிவர உணவு கிடைக்காமல் இறக்கின்றன. இது ஒரு புறம் இருக்க, அப்பகுதியில் தஞ்சம் புகும் மான்கள், மயில்கள், முயல்கள் உள்ளிட்டவைகளை வேட்டை நாய்களை வைத்து சிலர் வேட்டையாடுகின்றனர். இது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதனால் இப்பகுதியில் வசிக்கும் வனவிலங்குகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. காரியாபட்டி பகுதியில் சுற்றித் திரியும் வனவிலங்குகளை பாதுகாக்க வன அலுவலர்கள் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.