உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வாய்மொழி உத்தரவால் வழித்தடம் மாறும் பஸ்கள் அரசுக்கு வருவாய் இழப்புக்கு வழி

வாய்மொழி உத்தரவால் வழித்தடம் மாறும் பஸ்கள் அரசுக்கு வருவாய் இழப்புக்கு வழி

ஸ்ரீவில்லிபுத்துார்: தென் மாவட்டங்களில் இருந்து மதுரை வழியாக கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் செல்லும் அரசு பஸ்கள் அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவால் மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் செல்லாமல் பைபாஸில் செல்வதால் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு வருவாய் இழப்பும், பயணிகளுக்கு சிரமமும் ஏற்படுகிறது. பெர்மிட் வழித்தடத்தின்படி பஸ்கள் இயங்குவதை அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.தென் மாவட்டங்களான நாகர்கோவில், திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி, விருதுநகரைச் சேர்ந்த பல ஆயிரம் மக்கள் தொழில், கல்வி, வேலை வாய்ப்புக்காக கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட நகரங்களில் வசித்து வருகின்றனர். இவர்கள் வார, தொடர் விடுமுறை நாட்களில் சொந்த ஊர் வந்து செல்வது வழக்கம்.இதனால் ஞாயிற்றுக்கிழமைகளில் தென் மாவட்டங்களில் இருந்து கோவை, திருப்பூர் செல்லும் பஸ்கள் புறப்படும் நகரங்களிலேயே முழு அளவில் நிரம்பி விடுகின்றன.இதனால் இப்பஸ்கள் மதுரை மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் செல்லாமல் திருமங்கலத்தில் இருந்து நான்கு வழிச்சாலை வழியாக பயணிக்கிறது.இவ்வாறு செல்வதற்கு சம்பந்தப்பட்ட கிளை மேலாளர்கள், டிரைவர், கண்டக்டர்களுக்கு வாய் வழி உத்தரவிடுகின்றனர். இது பயணிகளை பொருத்தவரை விரைவான பயணத்திற்கு உதவும்.வழித்தட நகரங்களில் பயணிகளை ஏற்றி செல்வதில் டிரைவர், கண்டக்டர்கள் அலட்சியம் காட்டுகின்றனர். இதனால் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.மேலும் தமிழகத்தைப்பொறுத்தவரை ஒவ்வொரு பஸ்சிற்கும் மோட்டார் வாகன சட்டப்படி பெர்மிட் வழித்தடங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன் படியே செல்ல வேண்டும். எனவே மோட்டார் வாகன சட்டப்படி பெர்மிட் வழித்தடங்களில் தான் அனைத்து அரசு பஸ்களும் இயங்குகின்றன என்பதை அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என தென் மாவட்ட பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி