உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கோயில் அருகில் டாஸ்மாக் போதையில் குடிமகன்கள்

கோயில் அருகில் டாஸ்மாக் போதையில் குடிமகன்கள்

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் கோயில் அருகே டாஸ்மாக் கடையில் குடிமகன்கள் குடித்துவிட்டு ரோடு ஓரங்களில் அலங்கோலமாக கிடப்பதால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் வேதனையடைகின்றனர். அருப்புக்கோட்டை புதிய பஸ் ஸ்டாண்ட் செல்லும் வழியில் மதுரை ரோட்டில் அமுதலிங்கேஸ்வரர் கோயில் அருகே டாஸ்மாக் கடை உள்ளது. இக் கடையருகில் ஆழாக்கரிசி விநாயகர் கோயில், மாலைகாரி அம்மன் கோவில், டாஸ்மாக் கடையின் பின்புறம் யோகி ராம் கோயில், மெயின் ரோட்டிலேயே பள்ளிவாசல் உள்ளிட்டவைகள் உள்ளன. மதுரை ரோட்டில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்த ரோட்டை பயன்படுத்தி ஆயிரக்கணக்கான மாணவர்கள் பள்ளி, கல்லுாரி வந்து செல்கின்றனர். டாஸ்மாக் கடையை ஒட்டி உள்ள பாதை வழியாகத்தான் வேலாயுதபுரம், மணி நகரம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் மக்கள் பயந்து கொண்டே செல்ல வேண்டி உள்ளது. மெயின் ரோட்டில் இருக்கும் டாஸ்மாக் கடையில் மாலை 6:00 மணிக்கு மேல் குடிமகன்கள் அதிக அளவில் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பார் வசதி இல்லாததால் குடி மகன்கள் அருகில் உள்ள கடைகளில் உட்கார்ந்து குடிக்கின்றனர். இதனால் அங்கேயே அடிக்கடி தகராறில் ஈடுபடுகின்றனர். போதை தலைக்கு ஏறி ரோடு அருகில் அலங் கோலமாக விழுந்து கிடக்கின்றனர். மாலை நேரங்களில் கோயிலுக்கு வரும் பெண்களுக்கு குடிமகன்களால் தர்ம சங்கடமான நிலை ஏற்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் கோயில்களுக்கு செல்ல முடியாமல் பக்தர்கள் அவதிப்படுகின்றனர். உட்பகுதியில் இருந்த டாஸ்மாக் கடை 2 ஆண்டுகளாக மெயின் ரோடு அருகில் செயல்பட்டு வருவதால் தினம் தினம் பலவித பிரச்சனைகள் தொடர்ந்து ஏற்படுகிறது. இந்தப் பகுதியில் உள்ள பள்ளி கல்வி நிறுவனங்கள் மாணவர்கள் நலன் கருதி டாஸ்மாக் கடையை அகற்ற போலீஸ், வருவாய் துறை என மனு கொடுத்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. மக்கள் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் இந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை