உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஆணி அடிப்பதால் மரங்களுக்கு பாதிப்பு!

ஆணி அடிப்பதால் மரங்களுக்கு பாதிப்பு!

மாவட்டத்தில், தேசிய, மாநில, கிராமப்புற ரோடுகளில் நிழலுக்காகவும், சுற்றுப்புற சூழலை பாதுகாக்கவும் புளிய மரங்கள், புங்கை, வேம்பு, வாகை உள்ளிட்ட மரங்கள் நடப்பட்டன. பாதயாத்திரையாக செல்பவர்கள் மரங்களின் நிழலில் களைப்பு தெரியாமல் சென்று வந்தனர். மக்கள் தொகை, வாகன பெருக்கம் உள்ளிட்ட காரணங்களால் பெரும்பாலான ரோடுகள் விரிவாக்கம் செய்யப்பட்டன.அப்போது ரோட்டில் இருந்த மரங்கள் வெட்டப்பட்டன. அதற்குப் பின் அங்கு மரக்கன்றுகள் நட வேண்டும் என்பது விதி. பெரும்பாலான ரோடுகளில் கடமைக்காக பெயரளவில் மரக்கன்றுகளை நட்டு வைத்து கண்டும் காணாமல் விட்டு விடுகின்றனர்.முக்கிய ரோடுகளில் மரங்கள் இன்றி அதிக இடைவெளியாக இருக்கிறது. கடுமையான வெயிலால் அனல் காற்று வீசுகிறது. சூடு தாங்காமல் பாதசாரிகள் நடந்து செல்ல முடியாமல் பரிதவிக்கின்றனர். வாகனங்களில் செல்பவர்கள் கூட வெயிலின் தாக்கத்தால் அசந்து விடுகின்றனர். இது போன்ற காரணங்களால் சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் உள்ள ஒரு சில ரோடுகளில் 50 ஆண்டுகளைக் கடந்து புளிய மரங்கள், வேம்பு, வாகை உள்ளிட்ட மரங்கள் நிழல் கொடுத்து வருகின்றன. சுற்றுப்புற சூழலை ஓரளவிற்கு பாதுகாக்கின்றன. அவ்வாறு இருக்க சிறு, குறு, தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த பலர் மக்களின் கவனத்தை ஈர்க்க மரங்களில் விளம்பரப் பலகைகளை வைக்க நீண்ட ஆணிகளை கொண்டு மரத்தில் அடிக்கின்றனர்.மரங்கள் சேதம் ஏற்பட்டு காற்று, வெயில், மழைக்கு மரங்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு, பட்டுப் போகின்றன. விளம்பர பலகைகளால் வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.மரங்களை நட்டு வளர்க்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். மரக்கன்றுகளை நடுவதில் பெரும்பாலானவர்களுக்கு அக்கறையில்லை. இருக்கிற மரங்களை பாதுகாக்கவாவது முன் வர வேண்டும். ஆணி அடித்து பாதிப்பு ஏற்படுத்துவதை தடுக்க வேண்டும். மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி