ரேஷன் பொருட்களை பெற முதியவர்களுக்கு சிக்கல்
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் வயதான முதியவர்கள் ரேஷன் பொருட்களை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.அருப்புக்கோட்டையின் நகரின் பல பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இதில் இலவச அரிசி, சீனி, பாமாயில், கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன. கைரேகை பதிவு மூலமாக பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது.இதில் ரேஷன் கடைகளுக்கு செல்ல முடியாத வயதானவர்கள் தங்களது வாரிசுகள் உறவினர்கள் மூலமாக ரேஷன் பொருட்களை வாங்கும் வகையில் வட்ட வழங்கல் அதிகாரியிடம் மனு கொடுத்து, அதிகாரியின் பரிந்துரை கடிதத்துடன் முறைப்படி அவர்களது வாரிசுகள் மூலம் பொருட்களை பெற்று வந்தனர். தற்போது வட்ட வழங்கல் அதிகாரியிடம் இது போன்ற மனுக்கள் வரும்போது அதை மாவட்ட வழங்கல் அதிகாரிக்கு அனுப்ப வேண்டும் என்ற உத்தரவு வந்துள்ளது. இதனால் முதியவர்கள் அலையும் சூழல் ஏற்பட்டுள்ளது.இது போன்ற உத்தரவுகளை அந்த அந்த வட்ட வழங்கல் அதிகாரியே பிறப்பிக்கும் வகையிலும், முதியவர்களை அலைக்கழிக்க விடாமல் தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என பாதிப்படைந்தவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.