மின்வாரிய ஊழியர் தற்கொலை; உறவினர்கள் மறியல்
சிவகாசி; சிவகாசி அருகே செங்கமலப்பட்டியை சேர்ந்தவர் ஆனந்த் 33. இவருக்கு செல்வி என்ற மனைவியும், 10, 7 வயது இரு இரு மகள்களும் உள்ளனர். ஆனந்த் செங்கமலநாச்சியார்புரம் மின்வாரிய அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் ஆனந்த் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனந்த் தனது தற்கொலைக்கான காரணம் குறித்து எழுதிய 8 பக்க கடிதத்தை மீட்ட உறவினர்கள் நேற்று போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், பணத்தை மீட்டுத் தரக்கோரியும் சிவகாசி - சாத்துார் ரோட்டில் மறியல் போரட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் டி.எஸ்.பி., பாஸ்கர் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து கலைந்து சென்றனர். இதையடுத்து சிவகாசி கிழக்கு போலீசார் உதயகுமார், வீரமகாலிங்கம், ரங்கநாதன், சந்தன மாரியப்பன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.