சதுரகிரியில் தொடரும் காட்டுத்தீ; பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு
வத்திராயிருப்பு; சதுரகிரி மலைப்பகுதியில் பற்றிய காட்டு தீ நேற்றும் தொடர்ந்து எரிந்ததால் அதனை அணைப்பதில் வனத்துறையினர் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். இதனால் சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயிலுக்கு செல்ல மலையேற வந்த பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகத்தின் ஒரு பகுதியான சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் இருந்து வருசநாடு மலைப்பகுதி செல்லும் வனப்பகுதியில் ஆடி அமாவாசை நாளான்று தீப்பற்றியது. இதனை வனத்துறையினர் அணைத்தனர். ஆனாலும் புகைமூட்டம் தொடர்ந்து நீடித்து வந்த நிலையில் நேற்று முன் தினம் அதிகாலை 4:00 மணி முதல் காட்டுத்தீபற்றி எரிந்தது. வத்திராயிருப்பு, சாப்டூர் வனத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டாலும் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீயை அணைக்க முடியாமல் நேற்று மாலை வரை திணறினர். இதனால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு வந்த பக்தர்கள் மலையேற அனுமதி மறுக்கப்பட்டது. அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இரவிற்குள் தீ அணைக்கப்பட்டால் இன்று காலை நிலவும் சூழ்நிலையை பொறுத்து பக்தர்கள் தரிசனம் செய்ய மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.