சிவகாசி பஸ் ஸ்டாண்டில் தரை தளம் சேதம்
சிவகாசி: சிவகாசி பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் தரை தளம் சேதமடைந்திருப்பதோடு மழைக் காலங்களில் தண்ணீர் தேங்கும்போது பயணிகள் அவதிப்படுகின்றனர். சிவகாசி பஸ் ஸ்டாண்டிற்கு தினமும் 200க்கும் மேற்பட்ட முறை அரசு, தனியார் பஸ்கள் வந்து செல்கின்றன. அருகில் உள்ள கிராமங்கள் தவிர சாத்துார், விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம் உள்ளிட்ட நகரங்களில் இருந்து பல்வேறு பணி நிமித்தமாக தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பஸ் ஸ்டாண்டிற்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் பஸ் ஸ்டாண்டில் பஸ் நிறுத்துமிடம், தரைதளம் சேதம் அடைந்துள்ளது. ஏழு ஆண்டுகளுக்கு முன்பு பஸ் ஸ்டாண்டில் விரிவாக்க பணிகள் நடந்தது. இதில் பஸ் ஸ்டாண்ட் வளாகம் சீரமைக்க பட்டது. ஆனால் தற்போது பஸ் ஸ்டாண்டில் தரைதளம் சமமாக இல்லாமல் ஆங்காங்கே சேதம் அடைந்துள்ளது. கற்கள் பெயர்ந்து இருப்பதால் வாகனங்கள் செல்வதிலும் சிரமம் ஏற்படுகின்றது. தவிர பஸ் வரும் போது அவசரமாக ஏறுவதற்கு ஓடிச்செல்லும் பயணிகள் இடறி விழுகின்றனர். பஸ்சிலிருந்து இறங்கும் பயணிகளும் தடுமாறுகின்றனர். மேலும் மழைக்காலங்களில் சேதம் அடைந்த இடங்களில் தண்ணீர் தேங்கியும் பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. பஸ்கள் செல்லும்போது மழைநீர் அடிக்கப்பட்டு பயணிகள் மீது விழுகின்றது. தவிர நீண்ட நாட்கள் தண்ணீர் தேங்கி இருப்பதால் கழிவுநீராகி கொசு உற்பத்தி கேந்திரமாக மாறி விடுகின்றது. எனவே பஸ் ஸ்டாண்டில் சேதமடைந்த பகுதிகளை சீரமைக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.