எதிர்கோட்டையில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வரும் உடற்பயிற்சி கூடம் *இளைஞர்கள் அதிருப்தி
சிவகாசி, அக். 31 - வெம்பக்கோட்டை ஒன்றியம் எதிர்கோட்டையில் ரூ. 30 லட்சத்தில் விளையாட்டு உபகரணங்கள் உட்பட அனைத்து வசதிகளோடு உருவாக்கப்பட்ட அம்மா உடற்பயிற்சி கூடம் சிதிலடைந்து வருவதோடு சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டது. பராமரிப்பு செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என இளைஞர்கள் எதிர்பார்க்கின்றனர். வெம்பக்கோட்டை ஒன்றிய எதிர்கோட்டையில் 5 ஆண்டுகளுக்கு முன்பு ரூபாய் 30 லட்சத்தில் அம்மா பூங்கா, அம்மா உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டது. இங்கே அனைத்து விளையாட்டு உபகரணங்கள் நடைப்பயிற்சி தளங்கள் ,சிறுவர்கள் விளையாட ஊஞ்சல் உள்ளிட்ட உபகரணங்கள் ஏற்படுத்தி தரப்பட்டது. ஓய்வு எடுக்க இருக்கைகள், ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனியே சுகாதார வளாகம் வசதி உள்ளது. இந்நிலையில் உடற்பயிற்சி கூடம் சில மாதங்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்த நிலையில் பின்னர் செயல்படவில்லை. வளாகம் முழுவதுமே முட்புதர்கள் சூழ்ந்து விட்டது. இதில் பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் நடமாடுகின்றது. தவிர நடை பயிற்சி தளங்கள், இருக்கைகள், குழந்தைகள் விளையாடும் ஊஞ்சல் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் சேதம் அடைந்து விட்டது. தற்போது உடற்பயிற்சி கூடம் மது அருந்த, சூதாட என சமூக விரோதிகளின் கூடாரமாகவே மாறிவிட்டது. உள்ளே காலி மதுப்பாட்டில் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றது. எனவே உடற்பயிற்சி கூடத்தை பராமரித்து விளையாட்டு உபகரணங்கள் கொண்டு வரப்பட்டு விரைவில் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என இளைஞர்கள் எதிர்பார்க்கின்றனர்.