மேலும் செய்திகள்
சி.எம்.டி.ஏ., பணியிடங்கள் புதிதாக 119 உருவாக்கம்
06-Oct-2024
விருதுநகர் : தமிழக மின்துறையில் பணிச்சுமையால் கேங்மேன் மரணம், காயம் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவர்களை கள உதவியாளர்களாக மாற்றம் செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் எதிர்பார்க்கின்றனர்.தமிழக மின் வாரியத்தில் 2021ல் நேர்முகத் தேர்வு மூலம் 10 ஆயிரம் கேங்மேன்கள் நியமிக்கப்பட்டனர். 2023 மார்ச் முதல் பயிற்சி காலம் முடிந்து பணி செய்து வருகின்றனர். இவர்கள் வரையறுக்கப்பட்ட பணி மட்டுமின்றி அதிகாரிகளின் வற்புறுத்தலின் பெயரிலும், வாரியத்தில் ஆட்கள் பற்றாக்குறையாலும் கள உதவியாளர், வயர்மேன்களுக்கு உண்டான பணிகளையும் சேர்த்து செய்து வருகின்றனர். இதனால் மன அழுத்தத்திற்குள்ளாகி கடந்த ஓராண்டில் மட்டும் கேங்மேன்கள் பலர் மரணமடைந்துள்ளதுடன் விபத்துக்களில் சிக்கி ஊனமுற்று காயமுற்றுள்ளனர்.இதுகுறித்து விருதுநகரில் தமிழ்நாடு மின்சார வாரிய கேங்மேன் தொழிற்சங்க மாநில பொதுச்செயலாளர் யுவராஜ் கூறியதாவது: 2021 முதல் 2024 வரை 70க்கும் மேற்பட்ட கேங்மேன்கள் விபத்துக்களில் இறந்துள்ளனர். நுாற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 24 ஆயிரம் கள உதவியாளர் பணியிடங்கள், 10 ஆயிரம் வயர்மேன்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன.இந்த பணியிடங்களுக்கான வேலையையும் சேர்த்து கேங்மேன்களை செய்ய வற்புறுத்துவதால் விபத்து ஏற்படுகிறது. எல்.ஐ., எல்.டி., எச்.டி., என எல்லா மின் பணிகளையும் செய்கின்றனர். இவ்வாறு பணிபுரியும் கேங்மேன்களை கள உதவியாளர்களாக மாற்றம் செய்து சம்பள உயர்வு அளித்து சொந்த மாவட்டங்களில் பணிபுரிய செய்ய வேண்டும். அப்போது தான் விபத்துக்கள் குறையும். அடிப்படை சம்பளமாக ரூ.18,600 ஐ வழங்க வேண்டும்.கேங்மேன்களில் இறந்தவர்கள் பலர் திருமணம் ஆக கூடிய சூழலில் இருந்தவர்கள், நிச்சயமானவர்கள், ஒரு வயது கைக்குழந்தை வைத்திருந்தவர்கள். இதனால் அவர்களது குடும்பங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. அவர்களது குடும்பத்தினருக்கு வாரிசு அடிப்படையில் மின்துறையில் பணி வழங்க வேண்டும் என்றார்.
06-Oct-2024