உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / l ஆதரவற்ற பெண்களுக்கு ரேஷன் வினியோகம் உறுதிப்படுத்தப்படுதா; விழிப்புணர்வும், செயல்படுத்துவதும் அவசியம்

l ஆதரவற்ற பெண்களுக்கு ரேஷன் வினியோகம் உறுதிப்படுத்தப்படுதா; விழிப்புணர்வும், செயல்படுத்துவதும் அவசியம்

கணவனால் கைவிடப்பட்டு அல்லது திருமண வாழ்வு முறிவுற்று அல்லது தனியாக வசிக்கும் பெண்களில் நீதிமன்ற விவாகரத்து சான்று போன்ற ஆவணங்கள் இல்லாதோருக்கும் அரசு வழிகாட்டுதலின் படி ரேஷனில் பொருட்கள் வினியோகம் செய்யப்பட வேண்டும். ஆனால் மாவட்டத்தில் பல பகுதிகளில் ஆதரவற்ற பெண்கள் ரேஷன் கார்டு வாங்குவதும், பொருட்கள் வாங்குவதும் குதிரை கொம்பாக உள்ளது.ஆதரவற்ற நிலையில் வசிக்கும் பெண்களுக்கு உரிய உணவு பாதுகாப்பு வழங்கும் வகையில் ஒரு நபர் தனி நபராக வசித்து வருவதாக தெரிவித்து அவரது ஆதார் விவரத்துடன் இணையதளத்தில் ரேஷன் கார்டு வேண்டி விண்ணப்பித்து, அவர் தனி நபராக வசித்து தனியே சமையல் செய்து எந்த குடும்பத்தையும் சாராதுவாழும் நிலை தணிக்கையில் உறுதி செய்யப்பட்டால் அவருக்கு ரேஷன் கார்டு வழங்கப்பட வேண்டும்.ஒரு பெண்மணி கணவரால் நிராதரவாக கைவிடப்பட்டு அவரது ஆதார் கணவர் வைத்திருக்கும் ரேஷன் கார்டில் இடம் பெறும் நிலையில் அப்பெண் கணவருடன் வாழ்ந்து வராததால் அவருக்கான உணவு பொருள் ஒதுக்கீடு கணவரால் பெறப்படுவது சரியல்ல.இது போன்ற நேரங்களில் கணவர், அவரது ரேஷன் கார்டில் இணைக்கப்பட்டுள்ள மனைவியின் பெயைரை நீக்குவதற்கு இணையவழியில் விண்ணப்பிக்க முன்வராத நிலையில், அதற்கென ஒரு முறை கடவு சொல் பெற முன்வராத நிலையில் குறிப்பிட்டுள்ள பெண், அவரை சார்ந்துள்ள குழந்தைகள் தனியாக வசித்து வருவது தணிக்கை மூலம் உறுதி செய்யப்பட்ட பின் அவர் கணவருடன் குடும்பமாக வசிக்கவில்லை என எழுத்து மூலமாக பெற்று அதன் பின் வட்ட வழங்கல் அலுவலர், உதவி ஆணையாளர் ஜி2ஜி இணையதளத்தில் அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகார வரம்பை பயன்படுத்தி குடும்ப தலைவரின் அனுமதியில்லாமல் பெயரை நீக்கலாம்.பிரிந்து தனியாக வாழும் பெண்களிடம் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தால் நீதிமன்ற விவாகரத்து சான்று போன்ற ஆவணங்கள் வழங்க நிர்பந்தப்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும் என வழிகாட்டு நெறிமுறை உள்ளது. இத்தகைய ஆவணங்கள் இருந்தால் எளிதில் பெயர் நீக்கம் செய்யப்படும். அவ்வாறு ஆவணங்கள் இல்லாத பெண்களிடம் இருந்து தான் உணவு பாதுகாப்பு தொடர்பான புகார்கள் எழுகின்றன.விருதுநகரில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஒரு பெண், கணவர் ஆதரவின்றி தனியாக வசிப்பதால் ரேஷன் பொருட்கள் கூட குழந்தைக்கு வாங்க வழியில்லாமல் வாடுவதாக புகார் மனு அளித்திருந்தார். இதே சூழலை மாவட்டத்தில் பல ஆதரவற்ற பெண்கள் சந்தித்து வருகின்றனர். இது தொடர்பாக பெரிதாக விழிப்புணர்வு இல்லை. அவ்வாறு இருந்தாலும் செயல்படுத்த ஆண்டு கணக்கில் அலைக்கழிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது.எனவே ஆதவரற்ற பெண்களுக்கு சரியான முறையில் ரேஷன் வினியோகம் வழங்கப்பட்டு அவர்களது உணவு பாதுகாப்பு சரிவர பின்பற்றப்படுகிறதா என மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய வேண்டும். நுாறு சதவீதம் பெண்களுக்கு வழங்கப்படுவது உறுதிப்படுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை