அரசு மருத்துவமனையில் செயல்படாத நீரூற்று
விருதுநகர் : விருதுநகர் அரசு மருத்துவமனையில் வெளி நோயாளிகளின் மன அமைதிக்காக ஏற்படுத்தப்பட்ட நீருற்று' பல மாதங்களாக செயல்படாமல் உள்ளது. இதை முழுமையான செயல்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனை 2022 ஜன. 12ல் திறக்கப்பட்டது. மருத்துவமனை வளாகத்தில் வெளிநோயாளிகள் சீட்டு பதிவு செய்யும் இடத்தில் பார்ப்பவர்களை கவர்வதற்காகவும், மரத்தடியில் மனஅமைதியை ஏற்படுத்துவதற்காகவும் நீருற்று அமைக்கப்பட்டது. ஆனால் மருத்துவமனையின் தேவைக்காக தினமும் வெளியில் இருந்து லாரிகள் மூலம் தண்ணீர் விலை கொடுத்து வாங்கப்பட்டதால் நீருற்று செயல்பாட்டுக்கு கொண்டுவர முடியாமல் இருந்தது. தற்போது நகராட்சி மூலமாக தண்ணீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு தினசரி விநியோகம் நடக்கிறது. இதனால் பல மாதங்களாக செயல்படாமல் உள்ள நீருற்று மீண்டும் முழுமையான செயல்பாட்டுக்கு கொண்டுவர மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் சிகிச்சை பெற வரும் வெளிநோயாளிகளுக்கு வளாகத்திற்குள் நுழைந்தவுடன் மன அமைதியை ஏற்படுத்த முடியும்.