ஏழாயிரம் பண்ணை பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்கு இருக்கை வசதி தேவை
சாத்துார்: ஏழாயிரம் பண்ணை பஸ் ஸ்டாண்டில் பயணியருக்கு இருக்கை வசதி செய்து தரவேண்டும் என பயணிகள் விரும்புகின்றனர். ஏழாயிரம் பண்ணை ஊராட்சியை சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இங்குள்ள பஸ் ஸ்டாண்ட் வந்து வெளியூருக்கு சென்று வருகின்றனர். ஆனால் ஏழாயிரம் பண்ணை பஸ் ஸ்டாண்டில் பயணிகள் நிழற்குடைக்கு கீழ் அதிக அளவில் இருசக்கர வாகனங்கள் மட்டுமே நிறுத்தி வைக்கப்படுகிறது. இங்கு பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள் உட்கார்ந்து இளைப்பாறுவதற்கு உரிய இருக்கை வசதிகள் இல்லை. பெரும்பாலும் பயணிகள் பஸ்டாண்டு நிழற்குடைக்கு கீழே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்கள் மீது உட்கார்ந்து காத்திருக்கும் நிலை உள்ளது. இது போன்று இருசக்கர வாகனங்கள் மீது பயணிகள் உட்காரும்போது வாகன உரிமையாளர்களுக்கும் பயணிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்படுகிறது. பஸ் ஸ்டாண்ட் பகுதி பயணிகள் இருக்கை வசதி இல்லாததோடு இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் விதமாக மாறி வருவதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே பஸ் ஸ்டாண்ட் பயணிகள் நிழற்குடைக்கு கீழே நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களை அகற்றுவதோடு பயணிகள் உட்காருவதற்கு தேவையான இருக்கை வசதியும் குடிநீர் வசதியையும் செய்து தர வேண்டுமென அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.