கல்குறிச்சியில் வாரச்சந்தை ஏற்படுத்த மக்கள் எதிர்பார்ப்பு
காரியாபட்டி: கல்குறிச்சியில் காய்கறி வாரச்சந்தை ஏற்படுத்த மக்கள் எதிர்பார்க்கின்றனர். காரியாபட்டி கல்குறிச்சியில் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்நிலையில் காய்கறிகள் வாங்க ஒரு சில கடைகள் மட்டுமே உள்ளன. அதிக விலை, தேவையான காய்கறிகள் கிடைப்பதில்லை. 3, 4 கி.மீ., தொலைவில் தோணுகால், மல்லாங்கிணரில் காய்கறி சந்தை நடைபெறும். நீண்ட தூரம் சென்று வர வேண்டி இருப்பதால் மக்கள் சிரமப்படுகின்றனர். கல்குறிச்சியில் காய்கறி வாரச்சந்தை ஏற்படுத்தினால் போக்குவரத்திற்கு எளிதாக இருக்கும். வியாபாரிகள் காய்கறிகளைக் கொண்டு வந்து விற்பனை செய்ய ஏதுவாக இருப்பதுடன், சுற்றியுள்ள கிராம மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். இது ஒரு புறம் இருக்க, சுற்றி உள்ள கிராமங்களில் விளையும் காய்கறிகளை குறைந்த விலைக்கு விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்ய முடியும். கட்டுபடியாகும் விலைக்கு, இடைத்தரகர் இன்றி விற்பனை செய்யலாம். போதிய லாபம் கிடைக்கும். இதன் மூலம் ஊராட்சிக்கு கூடுதல் வருவாய் ஏற்படும். ஊரும் வளர்ச்சி அடையும். அரசு புறம்போக்கு நிலங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றில் முக்கிய இடத்தை தேர்வு செய்து, காய்கறி வாரச் சந்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.