UPDATED : செப் 15, 2026 05:02 PM | ADDED : செப் 15, 2026 04:32 PM
அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை அருகே குவாரி இயங்க அனுமதிக்க கூடாது என கிராம மக்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர். அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது குருந்தமடம் ஊராட்சி. இந்த ஊருக்கும், கல்லுப்பட்டிக்கும் இடையே பல ஆண்டுகளுக்கு முன்பு கல்குவாரி இயங்கி வந்தது. பின்னர் சில ஆண்டுகளாக மூடப்பட்ட நிலையில், குவாரி மீண்டும் இயங்குவதற்கான பணிகள் நடக்கப் போவதை அறிந்த ஊர் மக்கள் நேற்று காலை 10:00 மணிக்கு ரோடு மறியலில் ஈடுபட்டனர். மீண்டும் குவாரி இயங்க அரசு அனுமதி கொடுத்தால் கிராமத்தில் குடிநீர் ஆதாரம் பாதிப்பு அடையும் என்றும், குவாரியில் வெடி வைக்கும் போது அதன் அதிர்வால் வீடுகள் விரிசல் ஏற்படும் , அருகில் பள்ளி இருப்பதால் மாணவர்களுக்கு பாதிப்பும் ஏற்படும் எனவே குவாரி இயங்குவதற்கு அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி வந்தனர். டி.எஸ்.பி., விக்னேஷ், தாசில்தார் விஜயலட்சுமி , போலீசார் மக்கள் நலனை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, கூறியதன் பேரில் கலைந்து சென்றனர்.