பொதுப்பணி, நீர்வளத்துறைகளின் பாடாவதி கட்டடங்கள் : மழைநீர் தேங்கி கடும் சிரமம்
விருதுநகர் : விருதுநகரில் பொதுப்பணி, நீர்வளத்துறைகளின் பாடாவதி கட்டடத்தால் மக்கள் இங்கு நடமாடவே அச்சப்படுகின்றனர். அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் புதிய கட்டடம் கட்டி தரும் பொதுப்பணித்துறை கட்டடங்கள் அலுவலகத்தின் கட்டடம் கண்டமான நிலையில் உள்ளதால் இடிந்து விழும் அச்சத்தில் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். விருதுநகர் பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை அலுவலகங்களின் கட்டடங்கள் கட்டி 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றன. இவை வி.வி.வி., பெண்கள் கல்லுாரி எதிர்ப்புறம் அமைந்துள்ளது. இதில் கட்டடங்கள், நீர்வளத்துறை என இருபிரிவின் அலுவலகங்களும் அமைந்துள்ளன. இந்த கட்டடம் கட்டும் போதே சரியாக கட்டப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது. மழை பெய்தால் தண்ணீர் தேங்கும் வகையில் இருந்தது. 2005ல் நான்கு வழிச்சாலை வந்த பிறகு அது இன்னும் அதிகமானது.தண்ணீர் தேங்கி பல நாட்கள் கழித்து வடியும் நிலையிருந்தது. சத்திரரெட்டியபட்டியில் இருந்து வெளியேறும் நீர், கவுசிகா நதிக்கு செல்கிறது. இந்த நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்புகளால் மாயமாகி தினமலர் நகர், வேலுச்சாமி நகர் சந்திக்கும் இடத்தில் ஓடுகிறது.போக்குவரத்து பணிமனையில் பாதாளத்தில் அங்கிருந்து கவுசிகா நதிக்கும் செல்கிறது. அதீத மழை பெய்தால் இந்த மழைநீர் பொதுப்பணித்துறை அலுவலகங்களில் மாதக்கணக்கில் தேங்கும்.இதனால் கட்டடங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளதால் பணியாற்றும் ஊழியர்கள் அச்சத்துடன் உள்ளனர். இதனால் தற்போது புதிய கட்டடங்களை கட்டும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நீர்வளத்துறைக்கு மதுரை ரோட்டில் அலுவலகம் அமைகிறது. ஆனால் பொதுப்பணித்துறை கட்டடங்களுக்கோ இதுவரை கட்டடங்கள் கட்ட நிர்வாக அனுமதி பெறவில்லை.இதனால் டெண்டர் போன்ற நடவடிக்கைகளுக்கு வருவோர் சிரமப்படுகின்றனர். இந்த கட்டடங்கள் பாளம் பாளமாக பிளந்து மோசமான நிலையில் உள்ளது. இதை சரி செய்ய வேண்டும். ஊரின் அனைத்து அலுவலகங்களுக்கும் கட்டடம் கட்டி தரும் பொதுப்பணித்துறை கட்டடங்கள் அலுவலகத்திற்கு கட்டடம் கட்டுவது அவசியமாகிறது.