பள்ளி கட்டடத்தில் மழைநீர் தேங்கி சுவற்றில் நீர்க்கசிவு மாணவர்கள் அச்சம்
காரியாபட்டி: காரியாபட்டி தோணுகால் அரசு துவக்கப்பள்ளி கட்டடத்தில் மழைநீர் தேங்கி கசிவு ஏற்பட்டு சேதம் அடைந்து வருவதால் மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர். காரியாபட்டி தோணுகால் அரசு துவக்கப் பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளி கட்டடம் 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. கட்டடத்தின் மேல் தளத்தில் தட்டோடு பாதிக்கப்பட்டு, நாளடைவில் முற்றிலும் சேதம் அடைந்தது. சமீபத்தில் பெய்த தொடர் மழை காரணமாக மேல் தளத்தில் மழை நீர் தேங்கியது. வெளியேற வழி இன்றி கட்டடத்தின் சுவர் வழியாக கசிவு ஏற்பட்டு வருகிறது. கட்டடத்தின் சுவர்கள் பச்சை பசேல் என பாசி படர்ந்து காணப்படுவதுடன், ஆங்காங்கே சுவர்கள் விரிசல் ஏற்பட்டு உள்ளது. தரை தளம் முழுவதும் ஈரமாக இருப்பதால், குளிர் காரணமாக காய்ச்சல் வர வாய்ப்பு உள்ளதால் அச்சத்தில் உள்ளனர். சுவற்றில் களைச் செடிகள் முளைத்து ஆக்கிரமித்துள்ளன. சுவர்கள் சேதம் அடைவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருந்து வருகிறது.எனவே கட்டடத்தின் உறுதி தன்மையை ஆய்வு செய்து, மேல் தளத்தில் தட்டோடு பதித்து, செடிகளை அப்புறப்படுத்தி, சுவற்றில் ஏற்பட்ட விரிசலை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.