ஸ்ரீவில்லிபுத்துார்-மம்சாபுரம் ரோடு விரிவாக்க பணிக்கு டெண்டர்
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார்-மம்சாபுரம் ரோட்டை அகலப்படுத்த மாநில நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது. முதற் கட்டமாக ரூ. 4 கோடியில் கம்மாபட்டியில் இருந்து மம்சாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வரை ரோடு விரிவாக்கம் செய்ய டெண்டர் விடப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்துாரிலிருந்து 5 கிலோமீட்டர் தூரம் உள்ள மம்சாபுரத்திற்கு தினமும் அதிகளவில் வாகன போக்குவரத்து நடந்து வருகிறது. ஆனால், ஆனால், ரோடு குறுகலாக இருப்பதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. எனவே, ரோட்டை அகலப்படுத்த வேண்டும் என மக்கள் கோரி வந்தனர். இதனையடுத்து தற்போது 3.75 மீட்டர் அகலம் உள்ள ரோட்டின் இருபுறமும் விரிவாக்கம் செய்து 5.5 மீட்டர் அகலத்தில், ரூ. 4 கோடியில் ரோடு போடப்பட உள்ளது. இதற்கான டெண்டர் தற்போது விடப்பட்டுள்ள நிலையில் இன்னும் ஒரு சில வாரங்களில் பணிகள் துவங்க வாய்ப்புள்ளது. இதன்படி கம்மாபட்டி ஹிந்து மேல்நிலைப்பள்ளியில் இருந்து மம்சாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வரை 2.2 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரோடு விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதற்காக பொன்னாங்கண்ணி கண்மாயில் தடுப்பு சுவர் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.