சிவகாசி அரசு மருத்துவமனை முன்பு துார்வாரப்பட்ட ஓடை
சிவகாசி: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக சிவகாசி அரசு மருத்துவமனை முன்பு செல்லும் ஓடை துார்வாரப்பட்டு கோரைப்புற்கள் அகற்றப்பட்டது.சிவகாசி அரசு மருத்துவமனை முன்பாக சிறுகுளம் கண்மாய் செல்லும் ஓடை உள்ளது. மழை காலங்களில் ஓடை வழியாக தண்ணீர் கண்மாய்க்குச் சென்று விடும். இந்நிலையில் ஓடை முழுவதுமே கோரைப் புற்கள் ஆக்கிரமித்து உள்ளதால் மழை பெய்யும் போது தண்ணீர் வெளியேறாமல் ஓடையிலேயே தேங்கி விடுகின்றது.தவிர கழிவு நீரும் வெளியேற வழி இல்லை. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் மீண்டும் நோயுடனே திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே உடனடியாக ஓடையை துார்வாரி கழிவுநீரை அகற்ற வேண்டும் என தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக கமிஷனர் சரவணன் தலைமையில் ஓடை முழுமையாக தூர்வாரப்பட்டு கோரைப் புற்கள், கழிவுநீர் அகற்றப்பட்டது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.