கோயிலை சுற்றி குளு குளு மரங்கள், செடிகள்
ப ருவ நிலை மாற்றங்களால் அதிக வெப்பம் அதிக மழை உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் மக்கள் பாதிப்பு அடைகின்றனர். மரங்களை வெட்டி சாய்த்ததால் தான் இந்த விளைவு. மரங்களை அவசியத்தை மக்கள் உணர்ந்தாலும் இன்னும் விழிப்புணர்வு தேவையாக உள்ளது. பொது இடங்களிலும் வீடுகளிலும் அதிக அளவில் மரங்களை நட்டு பராமரிக்க வேண்டும். அந்த வகையில் அருப்புக்கோட்டை கஞ்சநாயக்கன்பட்டியில் கொண்டலம்மன் கோயில் கட்டப்பட்டு உள்ளது. சென்ற ஆண்டு கும்பாபிஷேகமும் நடந்துள்ளது. கோயிலை சுற்றி பசுமையாக மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளன. மேலும் ஆயிரக்கணக்கான பூஞ்செடிகள் வளர்க்கப்பட்டு கோயில் வண்ணமயமாக கண்கொள்ளா காட்சியாக உள்ளன. கோயில் அருகில் பெரிய அளவில் குளம் கட்டப்பட்டு சுற்றிலும் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. கோயில் கட்ட பூமி பூஜை போடப்பட்ட நாள் முதலிலேயே மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கப்பட்டு வருவதால் தற்போது குளு குளு சூழலில் உள்ளது. கோயிலுக்கு வருபவர்கள் பக்தியுடன் பசுமையான சூழலை அனுபவிக்கின்றனர். நாம் ஒரு அடர்ந்த வனத்திற்குள் செல்வது போன்ற சூழல் இருக்கிறது.