உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  ராட்சத ஜெட்ராடர் மூலம் பாதாள சாக்கடை பணி

 ராட்சத ஜெட்ராடர் மூலம் பாதாள சாக்கடை பணி

விருதுநகர்: விருதுநகரில் நவீன ராட்சத ஜெட் ராடர் வாகனம் மூலம் மெயின் ரோடுகளில் உள்ள பாதாள சாக்கடை அடைப்புகளை நீக்கும் பணி நடக்கிறது. விருதுநகர் நகராட்சியில் 2007 முதல் பாதாள சாக்கடை அமைக்கும் பணி துவங்கப்பட்டது. குடிநீர் வடிகால் வாரியம் மூலம் நடந்த இப்பணி, 2017ல் நகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கு பின் வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்பட்டது. 12 ஆயிரம் வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் அவ்வப்போது தொட்டிகளில் ஏற்படும் அடைப்புகளை நீக்க விருதுநகர் நகராட்சியில் 2 ஜெட் ராடர் வாகனம் இருந்தது. மேலும் தேங்கும் மணல் மேடுகளை அகற்ற 2 ஆட்டோக்களும் வாங்கப்பட்டன. பழைய ஜெட் ராடர் வாகனம் பழுது ஏற்பட்டதால் பாதாள சாக்கடை தொட்டிகளில் மண் அதிகமாகியது. இதனால் கட்டையாபுரம், பாத்திமா நகர், தெற்கு ரத வீதி, கிருஷ்ணமாச்சாரி ரோடு, புல்லலக்கோட்டை ரோடு, ராமமூர்த்தி ரோடுஆகிய பிரதான ரோடுகளில் அடைப்புகள் ஏற்பட்டன. அடைப்புகளை அகற்றும் பணி பெரும் சவாலாக மாறியது. குடியிருப்புகளுக்குள் சாக்கடை நீர் புகுந்தது. பல இடங்களில் குடி நீருடன் கலந்து கழிவு நீர் வந்தது. இதையடுத்து நகராட்சிக் கூட்டங்களில் அப்பகுதி கவுன்சிலர்கள் பெரும் போராட்டங்களை நடத்தினர் எனவேகோவையில் உள்ள நவீன ராட்சத ஜெட் ராடர் வாகனத்தை நகராட்சி நிர்வாகம் வரவழைத்தது. இந்த வாகனம் 8 மீட்டர் ஆழத்தில் இருக்கும் மண், சிறிய கற்கள், சேறு மற்றும் சகதிகளை கண் இமைக்கும் நேரத்தில் வெளியே கொண்டு வருகிறது. மேலும் பாதாள சாக்கடை குழாய்க்குள் லாவகமாகச் சென்று அடைப்புகளையும் நீக்கி வருகிறது. இதற்கு நாளொன்றுக்கு ரூ.60 ஆயிரம் வரை வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முற்றிலும் தானியங்கி முறையில் இயக்கப்படுகிறது. இதன் மூலம் புல்லலக்கோட்டை ரோடு,புளுகனுாரணி ரோடு, காமராஜர் பைபாஸ் ரோடு, மல்லாங்கிணர் ரோடு, ராமமூர்த்தி ரோடு ஆகிய பகுதிகளில் இருந்த நீண்ட கால அடைப்புகள் நீக்கப்பட்டன. அரசு விருதுநகர் நகராட்சிக்கு எனபுதிய ராட்சத ஜெட் ராடர் வாகனம் ஒன்றைவழங்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !