உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விருதுநகர் அருங்காட்சியக கட்டுமான பணிகள் மந்தம்

விருதுநகர் அருங்காட்சியக கட்டுமான பணிகள் மந்தம்

விருதுநகர், : விருதுநகர் அரசு அருங்காட்சியகம் கட்டுமான பணிகள் மந்தமானதை ஆய்வின் போது கண்டறிந்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, அதிகாரிகளிடம் கடிந்து கொண்டார். விருதுநகரில் வாடகை கட்டடத்தில் இயங்கிவரும் அரசு அருங்காட்சியகத்திற்காக மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகே 2 ஏக்கர் பரப்பில் ரூ.6.80 கோடியில் சொந்த கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. 2024 பிப். 26ல் கட்டுமான பணிகள் துவங்கப்பட்டன. ஆக. 25 உடன் கட்டுமான ஒப்பந்தம் முடிகிறது. தற்போது வரை 50 சதவீதம் மட்டுமே கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. நேற்று கட்டுமான பணிகள் குறித்து கலெக்டர் சுகபுத்ரா முன்னிலையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார். அப்போது கட்டுமான பணிகள் எப்போது முடிக்கப்படும் என்று பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். 3 மாதங்களில் முடியும் என்றனர். அப்போது அமைச்சர் பேசுகையில், ”நீங்கள் அருங்காட்சியகம் கட்டி முடிக்கும் வரை திறப்பு விழாவிற்காக முதல்வர் காத்திருப்பாரா. கட்டுமான பணிகள் மிகவும் மெதுவாக நடந்து வருகிறது. இது ஏற்றுக் கொள்ள முடியாதது. குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை முடிக்க வேண்டும். தொல் பொருட்கள் அனைத்தும் சாதாரண எலும்புக் கூடுகள் போன்றவை அல்ல. அவைகள் மதிப்பு மிக்கவை. உங்களின் மெத்தனப் போக்கு சரியில்லை,” என்று அதிகாரிகளிடம் கடிந்து கொண்டார். மேலும் ஒப்பந்த தாரரை அழைத்து விரைவில் கட்டுமான பணிகள் அனைத்தையும் முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி