UPDATED : பிப் 27, 2024 08:45 AM | ADDED : பிப் 27, 2024 07:02 AM
மாவட்டத்தில் 180 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்படுகின்றன. இங்கு விவசாயிகளுக்கு பயிர்க்கடன், தேவையான இடுபொருட்கள் வழங்கப்படுகின்றன. தமிழக அளவில் கூட்டுறவு கடன் சங்களால் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டும், குறிப்பாக ஒரு சில கடன் சங்கங்கள் தவிர மற்ற அனைத்தும் நஷ்டத்தில் தான் இயங்குகின்றன. இன்னும் சில சங்கங்கள் நகையை பிணையமாக வைத்து தான் பயிர்க்கடன் வழங்கும் நிலையில் நஷ்டத்தில் இயங்குகின்றன. இதனால் விவசாயிகள் சிரமப்படும் சூழல் உள்ளது.ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்திற்கு மேல் கடன் பெறும் போது பிணை வைத்து கடன் பெறுவது வழக்கம். அவ்வாறு வைக்கப்பட்ட பிணையில் தங்க நகைகள், பத்திரங்கள் இருக்கும். அவற்றை கையாடல் செய்வது, முறைகேடாக விற்பது போன்ற நடவடிக்கைகளில் ஓரிரு செயலாளர்கள், தலைவர்கள் ஈடுபட்ட சங்கங்கள் கலைக்கப்பட்டு முடக்கப்பட்டன. சம்மந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.இந்நிலையில் விவசாயிகள் நலன் கருதி அவர்களுக்கு மாற்று சங்கங்களான பக்கத்து கிராமம், ஊர்களில் இருந்து சங்கங்கள் அமைக்கப்பட்டன. உதாரணமாக விருதுநகர் பட்டம்புதுார், இனாம்ரெட்டியபட்டி, காரியாபட்டிமாந்தோப்பு, கோட்டையூர்என பல்வேறு கடன் சங்கங்கள் செயல்படாமல் உள்ளன. பக்கத்து ஊர் சங்கங்களில் தான் விவசாயிகள் கடன் பெற்று வருகின்றனர். இன்னும் பல சங்கங்கள் இது போல்மாவட்டத்தில் உள்ளன.அதன் கட்டடங்களும் செயல்பாடின்றி சிதிலமடைந்து சமுக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. விவசாயிகள் கடன் பெற அலைக்கழிக்கப்படுகின்றனர். வரவு, செலவு இல்லாத இந்த சங்கங்களில் கடன் வழங்குவது இன்று வரை குதிரைக்கொம்பாக உள்ளது. ஆகவேகலைக்கப்பட்ட, இடமாற்றப்பட்ட சங்கங்களுக்கு புத்துயிர் அளிப்பது மாவட்ட கூட்டுறவுத்துறையின் கடமை. கடன் சங்கங்கள் தொடர்பாக ஆய்வு செய்து தீர்வு காண வேண்டும்.