நாரணாபுரத்தை மையமாக கொண்டு இ.எஸ்.ஐ., மருந்தகம் செயல்படுமா
சிவகாசி; சிவகாசி அருகே நாரணாபுரத்தை மையமாக கொண்டு செயல்பட வேண்டிய இ.எஸ்.ஐ., மருந்தகம் சிவகாசியில் செயல்படுவதால் 20 ஆயிரம் தொழிலாளர்கள் சிரமப்படுகின்றனர். எனவே இ.எஸ்.ஐ., மருந்தகத்தை நாரணாபுரத்தில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.சிவகாசி அருகே நாரணாபுரம், அனுப்பன்குளம், பள்ளபட்டி, முதலிப்பட்டி, பூச்சக்காப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள தொழிலாளர்களுக்காக நாரணாபுரத்தில் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இ.எஸ்.ஐ.,மருந்தகம் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. இதில் இப்பகுதியைச் சேர்ந்த 20 ஆயிரம் தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். ஆனால் நாரணாபுரத்தில் இடம் இல்லை என சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே கேட் அருகே இ.எஸ்.ஐ., மருந்தகம் செயல்படுகின்றது.இதனால் பகுதி தொழிலாளர்கள் குறைந்தது 6 முதல் 10 கிலோமீட்டர் துாரம் வரை பயணம் செய்து அலைய வேண்டியுள்ளது. மேலும் சிறிய காய்ச்சல், தலைவலி என்றால் கூட ஒரு நாள் முழுவதும் வீணாகிறது. நாரணாபுரத்தில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க கட்டடம் தற்போது வரை பயன்பாட்டில் இல்லை. எனவே இங்கு இ.எஸ்.ஐ., மருந்தகத்தை செயல்படுத்த வேண்டும் என இப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.