| ADDED : செப் 15, 2011 11:07 PM
திருநெல்வேலி:தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என, நெல்லையில் நடந்த ம.தி.மு.க., மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.நெல்லையில் நேற்று ம.தி.மு.க.,வின் திறந்தவெளி மாநாட்டில், 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை வருமாறு:உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட ம.தி.மு.க., முடிவெடுத்துள்ளது. பெரியாறு அணையை உடைத்து விட்டு புதிய அணை கட்ட, முதல்வர் உம்மன்சாண்டி தலைமையிலான காங்., அரசு முயற்சிக்கிறது. இதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட, தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் நஷ்டஈடு தமிழக அரசு வழங்க வேண்டும். இலங்கையில் தமிழர்களிடம் பொது ஓட்டெடுப்பு நடத்த ஐ.நா.,வை உலகத் தமிழர்கள் வலியுறுத்த வேண்டும். கச்சத்தீவை மீட்க தமிழக அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.தி.மு.க.,வைப் போலவே அ.தி.மு.க.,வும் இலவசங்களை வாரி வழங்குவதற்காக ஆண்டுக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் மது விற்பனையை ஊக்குவிக்கிறது. எனவே, தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். அரசு கேபிள்களில் அனைத்து சேனல்களும் தெரியும் வண்ணம் அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் போன்ற தீர்மானங்கள் இயற்றப்பட்டன.