| ADDED : பிப் 23, 2025 05:00 AM
நாகப்பட்டினம்: நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு, கடந்த ஆண்டு நவம்பரில் நிறுத்தப்பட்ட கப்பல் போக்குவரத்து நேற்று மீண்டும் துவங்கியது.இந்தியா - இலங்கையிடையே வர்த்தகம், சுற்றுலா மேம்பட, நாகையில் இருந்து காங்கேசன் துறைக்கு பயணியர் கப்பல் சேவையை 2023 அக்., 14ம் தேதி பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.இந்திய கப்பல் கழகத்துக்கு சொந்தமான, 'சிரியாபாணி' என்ற கப்பல் சேவையை துவக்கியது. பருவ மாற்றத்தால் சில தினங்களில் நிறுத்தப்பட்டது.பின், இரு நாட்டிற்கான கப்பல் போக்குவரத்துக்கான சேவை, தனியார் நிறுவனம் வசம் ஒப்படைக்கப்பட்டது.இதில், 150 பேர் பயணிக்கும் வகையில் 'சிவகங்கை' என்ற சிறிய கப்பல், கடந்த ஆண்டு ஆக., 16 முதல் பயணத்தை துவங்கியது. பருவ மாற்றத்தால் நவ., 19ம் தேதி சேவை நிறுத்தப்பட்டது.இந்நிலையில், நேற்று காலை, 83 பயணியருடன் தனியார் கப்பல் நாகையில் இருந்து இலங்கைக்கு புறப்பட்டுச் சென்றது.ஒருவழி கட்டணமாக, 4,250 ரூபாய், இருவழி கட்டணமாக, 8,500 ரூபாய் டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.ஒரு பயணிக்கு, 10 கிலோ வரை பொருட்கள் இலவசமாக எடுத்துச் செல்லலாம். கூடுதல் எடைக்கு கிலோ ஒன்றுக்கு, 50 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.