உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்துக்கு மும்மொழி தேவைதான்: வெளிநாட்டு தமிழறிஞர்கள் கருத்து

தமிழகத்துக்கு மும்மொழி தேவைதான்: வெளிநாட்டு தமிழறிஞர்கள் கருத்து

கோவை: கோவையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற வெளிநாட்டு தமிழறிஞர்கள், 'தமிழகத்துக்கு மும்மொழி தேவை' என, கருத்து தெரிவித்தனர். தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், உலக தாய்மொழி தினம், கோவை ஈச்சனாரியில் உள்ள ரத்தினம் கல்லுாரி அரங்கில் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. வெளிநாடுகளில் வாழும் தமிழர்களில், தமிழ் மொழி சார்ந்து ஆய்வுப்பணிகளை செய்து வரும், மொழியியல் அறிஞர்களுக்கு இந்நிகழ்ச்சியில் விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த தமிழ் ஆய்வுப் பணிக்கான விருது பெற்ற இந்த தமிழறிஞர்களிடம், மும்மொழி திட்டம் பற்றி கேட்ட போது, வரவேற்று பதில் அளித்தனர்.

எந்த பாதிப்பும் வராது

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தலிஞ்சான் முருகைய்யா கூறியதாவது:பல நுாறு ஆண்டுகளுக்கு முன், தமிழகத்தில் இருந்து புலம் பெயர்ந்து வெளிநாடுகளுக்கு சென்ற தமிழர்கள், தமிழ்மொழியை மறந்து விட்டனர். தமிழ் பண்பாட்டை மட்டும் நினைவில் வைத்துள்ளனர்.தமிழகத்திலும் தமிழ் மொழி வளர்ச்சி அடையவில்லை. நம் தாய்மொழியான தமிழை கட்டாயம் படிக்க வேண்டும். ஆனால், இன்றைய காலத்துக்கு அது மட்டும் போதாது. பிறமொழிகளையும் கற்றுக்கொள்வது அவசியம்.மத்திய அரசு வலியுறுத்தும், மும்மொழி திட்டம் வரவேற்க வேண்டிய ஒன்று. இன்னொரு மொழியை படிப்பதால், நம் மொழிக்கு எந்த பாதிப்பும் வராது.இவ்வாறு அவர் கூறினார்.

லண்டனைச் சேர்ந்த செல்லத்தம்பி சிறீகந்தராசா கூறியதாவது:

வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு, தமிழால் எந்த பயனுமில்லை. லண்டனில் உள்ள என் மகன், மகளுக்கு தமிழ் நன்றாக தெரியும். அதனால் அவர்களுக்கு பொருளாதாரம் சார்ந்து எந்த பயனுமில்லை. பிரெஞ்சு, ஜெர்மன், சீன மொழிகளை கற்றுக்கொண்டால் நல்ல பலன் உண்டு.பிற்காலத்தில் அந்த நாட்டின் உயர் பதவிகளுக்கு கூட வரலாம். மத்திய அரசு கொண்டு வந்துள்ள மும்மொழி திட்டம் தேவை தான். இன்னொரு மொழியை கற்றுக்கொள்வதால் தவறில்லை.நமக்கு தேசத்தோடு, ஒரு தொடர்பு மொழி தேவை. மற்ற மாநிலங்களில் வேலை வேண்டும் என்றால், ஹிந்தியோ வேறு மொழியோ அவசியம் படிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

சிங்கப்பூரைச் சேர்ந்த பிச்சினிக்காடு இளங்கோ கூறியதாவது:

சிங்கப்பூரில், தமிழ் மொழி சிறப்பாக வளர்ந்துள்ளது. சிங்கப்பூர் அரசு, தமிழ் வளர்ச்சிக்கு பல உதவிகளை செய்கிறது. அங்குள்ள தமிழர்கள், சிங்கப்பூர் மொழியை நன்றாக கற்றுக்கொண்டு உரையாடுகின்றனர். தமிழகத்தில் இப்போது மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.எந்த மொழியையும் திணிக்கக் கூடாது. விரும்பினால் கற்றுக் கொள்ளலாம். பிற மாநிலங்களில் தமிழ் மொழியை பாடமாக கற்றுக் கொடுத்தால், இங்கும் நாம் அந்த மொழியை, பாடமாக கற்றுக்கொள்வதில் தவறில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

குழப்பம்

அதே நிகழ்ச்சியில், அவர்களுக்கு பின் பேசிய, தமிழக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், 'தமிழகத்தில் மீண்டும் ஒரு மொழி போராட்டத்தை துவங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது' என்றார்.தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை விருதளித்த தமிழறிஞர்கள், மும்மொழி திட்டத்தை வரவேற்று பேசிய அதே நிகழ்ச்சியில், அமைச்சர் சாமிநாதன் முரணாக பேசியது, நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை குழப்பமடையச் செய்தது.

பெற்றவர்கள்

லண்டனைச் சேர்ந்த செல்லத்தம்பி சிறீகந்தராசாவுக்கு, உலக தமிழ்ச்சங்க இலக்கண விருதும், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தலிஞ்சான் முருகைய்யாவுக்கு உலக தமிழ்ச் சங்க மொழியியல் விருதும், சிங்கப்பூரைச் சேர்ந்த பிச்சினிக்காடு இளங்கோவுக்கு, உலக தமிழ்ச்சங்க இலக்கிய விருதும் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Padmasridharan
பிப் 23, 2025 08:56

"தமிழகத்திலும் தமிழ் மொழி வளர்ச்சி அடையவில்லை" மொதல்ல "ழ" வை சரியா உச்சரிக்க கத்துக்கொடுக்கட்டும். "மற்ற மாநிலங்களில் வேலை வேண்டும் என்றால், ஹிந்தியோ வேறு மொழியோ அவசியம் படிக்க வேண்டும்" அதான் வேற மொழி ஆங்கிலம் இருக்குதே


மணியன்
பிப் 23, 2025 08:14

அமைச்சரே இது 1965 அல்ல 2025 .இப்போது மொழிப்போர் சாத்தியமில்லை.மக்கள் மொழியை விட பொருளாதாரத்துக்கு முன்னுரிமை அளிக்கின்றனர். மக்களுக்கு வேலைவாய்ப்பு தேவை. தங்களது உச்சகட்ட ஊழலை,கொள்ளையை மறைக்க மொழியை கேடயமாக பயன்படுத்துவதை மக்கள் தெளிவாக புரிந்து கொண்டுள்ளனர்.


முருகன்
பிப் 23, 2025 05:10

வெளிநாட்டினருடன் ஹிந்தியில் பேசி பிழைக்கும் இவர்கள் சொல்வது சாரியாக தான் இருக்கும்


கணேஷ்குமார்
பிப் 23, 2025 04:41

தமிழர்கள் ஐந்து மொழிகள் படிக்க வேண்டும்


நிக்கோல்தாம்சன்
பிப் 23, 2025 08:35

இந்த உண்மையை சொன்னால் நீங்க சங்கியாயிடுவீங்க , அடுத்த தலைமுறை பிழைப்பதற்கு வழி சொல்லுங்க என்றால் கடன் கொடுப்பார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை