விநாயகர் சதுர்த்தி சுற்றறிக்கை அலுவலர்கள் மீது நடவடிக்கை
சென்னை:சுற்றுச்சூழல் துறை செயலர் செந்தில்குமார் வெளியிட்ட அறிக்கை:விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாட்டாளர்கள், அமைப்பாளர்கள் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை தொடர்பாக, ஆண்டுதோறும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழியாக, சில அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன. உயர் நீதிமன்றம், பசுமை தீர்ப்பாயம் வழியாக பெறப்படும் அறிவுறுத்தல்கள், பொதுமக்களுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும், செய்தி வெளியீடாக வழங்கப்படுகின்றன. இந்த சுற்றறிக்கை, விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாட்டாளர்கள், அமைப்பாளர்கள், சிலை செய்வோர் மற்றும் பொதுமக்களுக்கு மட்டுமே உரிய அறிவுறுத்தல்.இந்நிலையில், ஒரு சில மாவட்டங்களில், தவறான புரிதல் அடிப்படையில், பள்ளிகளுக்கு விநாயகர் சதுர்த்தி விழா அறிவுறுத்தல், உறுதிமொழி குறித்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.இவ்வாறு பள்ளிகளுக்கு வெளியிடப்பட்ட அறிவுறுத்தல், அரசின் ஆணைகளுக்கு முற்றிலும் முரணானது என்பதால், ஒரு சில மாவட்டங்களில் மட்டும் வெளியிடப்பட்ட அந்த அறிவுறுத்தல் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. தவறான சுற்றறிக்கை அனுப்பியதற்கு பொறுப்பான அலுவலர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.