பதவியை காப்பாற்றிக்கொள்ள பா.ஜ.,வுடன் தி.மு.க., இணக்கம்
தஞ்சாவூர்,:அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் கூறியதாவது:நடிகர் விஜய் கட்சி துவங்கியதால், அவரை பார்த்து யாரும் அஞ்ச வேண்டிய அவசியமில்லை. எஜமானர்களாகிய மக்கள் தான், யார் தேவை என்பதை தீர்மானிப்பர். மத்திய அரசை கண்டு, தி.மு.க., பயப்படுவதற்கான காரணம் அனைவருக்கும் தெரியும். தங்கள் பதவியை காப்பாற்றிக் கொள்ள, தி.மு.க.,வினர் எந்த நிலைக்கும் இறங்கி வர தயாராக இருப்பர். மத்தியில் பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளதால், தி.மு.க.,வினர் பயந்து, பா.ஜ.,விற்கு இணக்கம் காட்டி வருகின்றனர். மடியில் கனம் இருந்தால், பயம் இருக்கத்தானே செய்யும்.ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒன்றிணைய முயற்சி செய்வது இயற்கை. இதற்கு, பழனிசாமி தடையாக இருப்பதால், சசிகலாவின் சுற்றுப்பயணம் எந்த அளவுக்கு பலன் கொடுக்கும் என்று தெரியவில்லை.பழனிசாமியின் சுயநலத்தையும், தவறான நடவடிக்கைகளையும் தொண்டர்கள் புரிந்து கொண்டு, அவரது நடவடிக்கைக்கு முடிவு கட்டுவர்.இது நிகழாவிட்டால், 2026 தேர்தலுக்கு பின், ஜெயலலிதாவின் கட்சி இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும்.இவ்வாறு அவர் கூறினார்.