கூடலுார்: தேக்கடியில், முல்லைப் பெரியாறு அணை கண்காணிப்பு பணிக்காக கேரள நீர்ப்பாசன துறைக்கு புதிய படகு இயக்கத்தை, கேரள அமைச்சர் ரோஷி அகஸ்டின் துவக்கி வைத்தார். கிட்டத்தட்ட, 11 ஆண்டுகளாக அனுமதி கிடைக்காமல் தமிழக நீர்வளத் துறையின், 'தமிழ் அன்னை' படகு காத்திருக்கும் நிலையில், கேரள நீர்ப்பாசன துறைக்கு புதிய படகு துவக்கியதற்கு தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.முல்லைப் பெரியாறு அணை, தமிழக நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அணை நீரை நம்பி தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை ஆகிய மாவட்டங்களில், 2 லட்சத்து 47,000 ஏக்கரில் பாசன நிலங்கள் உள்ளன. ஒரு கோடி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. 'ஜலரத்தினா, கண்ணகி'
தமிழக நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால், அணை கண்காணிப்பு பணிக்காக தேக்கடி படகு நிறுத்தப்பகுதியில் இருந்து, 14 கி.மீ., துாரமுள்ள அணைக்கு செல்வதற்கு ,'ஜலரத்தினா, கண்ணகி' என தமிழக படகுகள் உள்ளன. இப்படகுகள், 40 ஆண்டு பழமையானதால் புதிய படகு வாங்க முடிவு செய்து, 11 ஆண்டுகளுக்கு முன், 1 கோடி ரூபாயில் இரு படகுகள் வாங்கப்பட்டன.அதில் ஒரு படகு, தேக்கடி ஏரிக்கு கொண்டு வரப்பட்டது. அதற்கு, தமிழ் அன்னை என்று பெயரிடப்பட்டது. ஆனால், இப்படகு, கூடுதல் குதிரைத் திறன் கொண்டதாக உள்ளது எனக்கூறி, கேரள வனத்துறை அனுமதி தரவில்லை.தேக்கடி ஏரியில் பெரியாறு புலிகள் காப்பகத்திற்கு ஒன்பது படகுகளும், கேரள சுற்றுலாத்துறைக்கு ஆறு படகுகளும், கேரள காவல் துறைக்கு இரு படகுகளும், கேரள நீர்ப்பாசன துறைக்கு ஒரு படகும் இயக்கப்படுகின்றன. இது தவிர விரைவு படகும் உள்ளது.இந்நிலையில் பெரியாறு அணையை கண்காணிக்க, கேரள நீர்ப்பாசன துறைக்கு புதிய படகை தேக்கடியில், கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் நேற்று முன்தினம் துவக்கி வைத்தார்.தமிழக நீர்வளத்துறைக்கு சொந்தமான படகு, 11 ஆண்டுகளாக அனுமதியின்றி தேக்கடி ஏரியில் காத்திருக்கும் நிலையில், கேரள தரப்பில் தொடர்ந்து புதிய படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கு தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறியதாவது:தமிழக நீர்வளத்துறையின் படகுகள் ஆண்டு கணக்கில் அனுமதியின்றி நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், கேரளாவில் அனைத்து துறைகளுக்கும் புதிய படகை தமிழகத்திடம் எந்த அனுமதியும் பெறாமல் இயக்கி கொண்டே உள்ளது. இது, இரு ஒப்பந்தங்களையும் மீறும் செயலாகும். தமிழகத்தின், 130 குதிரை திறன் கொண்ட படகிற்கு அனுமதி தராத நிலையில், கேரள போலீசாரின் 150 குதிரை திறன் கொண்ட படகை மட்டும் எப்படி இயக்குகின்றனர். கண்டன ஊர்வலம்
சட்ட விதிமுறைகளை மீறும் கேரள மாநில அரசு மீது தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக தேசிய புலிகள் ஆணையத்திற்கு புகார் அனுப்ப உள்ளோம். மார்ச் முதல் வாரத்தில் அணைக்குள் கேரள தரப்பில் இயக்கப்படும் படகுகளின் எண்ணிக்கையை குறைக்க கோரி, கம்பத்திலிருந்து குமுளியை நோக்கி கண்டன ஊர்வலம் நடத்த உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.முன்னதாக, அனுமதி பெறாமல் கேமரா பொருத்தியதாக, தமிழக நீர்வளத்துறை அலுவலகத்தில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை அகற்ற, கேரள அதிகாரிகள் அழுத்தம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.