தியாகிகளின் நிலத்தில் மருத்துவ கழிவுநீர் திருவண்ணாமலை கலெக்டருக்கு நோட்டீஸ் திருவண்ணாமலை கலெக்டருக்கு நோட்டீஸ்
சென்னை:சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு, ஒதுக்கீடு செய்த நிலத்தில், மருத்துவ கழிவு நீர் விடப்படுவதை எதிர்த்த வழக்கில், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத, திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோருக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.திருவண்ணாமலை மாவட்ட, சுதந்திர போராட்ட தியாகிகள் வீர மரணமடைந்தோர் குடும்ப நல சங்கத்தின் தலைவர் திருஞானசம்பந்தமூர்த்தி தாக்கல் செய்த மனு:திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த, சுதந்திர போராட்ட தியாகிகளுக்காக, தமிழக அரசு, திருவண்ணாமலை வேங்கிக்கால் கிராமத்தில், நிலம் ஒதுக்கியது.இந்த நிலத்திற்கு அருகில், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையின் கழிவுநீர், தியாகிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் உள்ள காலி இடங்களில் விடப்படுகிறது. கழிவுகளையும் அந்த நிலத்தில் கொட்டுகின்றனர். இதனால், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு நோய்கள் பரவுகின்றன. கடந்த 10 ஆண்டுகளாக, இதே நிலைதான். இதுகுறித்து, 10க்கும் மேற்பட்ட மனுக்களை, மாவட்ட கலெக்டருக்கும், மருத்துவமனை நிர்வாகத்திற்கும் அனுப்பினோம். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, மனுக்களை பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்க, மாவட்ட கலெக்டருக்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த வழக்கை விசாரித்த, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய முதல் பெஞ்ச், மனுதாரரின் மனுவை பரிசீலித்து, சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கும்படி, கடந்த ஜூலை 5ம் தேதி உத்தரவிட்டது. இதை அமல்படுத்தாததால், திருஞானசம்பந்தமூர்த்தி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு, தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் வி.நந்தகோபாலன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு பதில் அளிக்க, திருவண்ணாமலை கலெக்டருக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் 28ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.