UPDATED : ஏப் 27, 2024 06:19 AM | ADDED : ஏப் 27, 2024 01:21 AM
சென்னை:தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய முன்னாள் உறுப்பினர் பாலசுப்பிரமணியன், 81, காலமானார்.நாமக்கல் நகரில் பிறந்தவர். உயர்நிலைக் கல்வியை நாமக்கல் அரசு பள்ளியில் முடித்தார். திருச்சி புனித ஜோசப் கல்லுாரியில், பொருளாதாரத்தில் முதுகலை வரை படித்தார். சென்னை பல்கலையில் பொருளாதாரத்தில் முனைவர் பட்ட ஆய்வை நிறைவு செய்தார்.பொருளாதார பேராசிரியராக, 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக பணியாற்றினார். கடந்த 1996 முதல் 2002 வரை, டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினராகப் பணியாற்றினார். நேற்று அதிகாலை 4:30 மணிக்கு, சென்னையில் மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தினார். அவரது இறுதிச் சடங்கு, நியூ ஆவடி ரோடில் உள்ள, வேலங்காடு மயானத்தில் இன்று காலை 11:00 மணிக்கு நடக்க உள்ளது.