உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சீமான் வீட்டு காவலாளியை தாக்கிய இன்ஸ்பெக்டர் மீது போலீசில் புகார்

சீமான் வீட்டு காவலாளியை தாக்கிய இன்ஸ்பெக்டர் மீது போலீசில் புகார்

சென்னை: 'நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில், பாதுகாப்பு பணியில் இருந்த முன்னாள் ராணுவ வீரரை தாக்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரவீன் ராஜேஷ் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, போலீசில் முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர்.இந்திய முப்படை மற்றும் துணை ராணுவப்படை முன்னாள் வீரர்கள் நல கூட்டமைப்பின் தலைவர் சுரேஷ் பாபு தலைமையில் நேற்று, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார்:நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில், பாதுகாவலராக வேலை பார்த்து வரும் அமல்ராஜ், இந்திய ராணுவத்தில் 25 ஆண்டுகள் பணிபுரிந்தவர். தன் கடமையை செய்தவரை, சென்னை நீலாங்கரை சட்டம் - ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பிரவீன் ராஜேஷ் கடுமையாக தாக்கியுள்ளார். முன்னாள் ராணுவ வீரர் என்று சொன்ன போதும், தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். துப்பாக்கியை எடுத்துக் கொடுக்க முயன்ற அமல்ராஜ் மீது, அபாண்டமான குற்றச்சாட்டு கூறப்படுகிறது. சட்ட ரீதியாக அனுமதி பெற்றே, அமல்ராஜ் துப்பாக்கி வைத்திருந்தார்.பிரவீன் ராஜேஷ், இதற்கு முன் பணிபுரிந்த இடங்களிலும் மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளார். மனிதத் தன்மையற்று, அமல்ராஜின் கண்களைக் குத்தி, கொடூரமாக தாக்கிய பிரவீன் ராஜேஷ் மற்றும் அவருடன் இருந்த போலீசார் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கடைகள் அடைப்பு

நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வன்கொடுமை மற்றும் திருமண மோசடி புகாரில், விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, கடந்த மாதம் 27ல், சீமானுக்கு போலீசார் 'சம்மன்' அளித்தனர். அதன்படி, வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் அவர் ஆஜராவார் என எதிர்பார்க்கப்பட்டதால், அப்பகுதியில் உள்ள கடைகள், இரண்டு நாட்களாக அடைக்கப்பட்டுள்ளன. காவல் நிலையம் உள்ள ஸ்ரீதேவிகுப்பம் சாலையில் தடுப்புகள் அமைத்து, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தினர். இதனால், வாகன ஓட்டிகளும், ஸ்ரீதேவிகுப்பம் பகுதிவாசிகளும் மிகவும் சிரமப்பட்டனர். இன்ஸ்பெக்டருக்கு 'வாரன்ட்'நீலாங்கரை இன்ஸ்பெக்டர் பிரவீன் ராஜேஷுக்கு, தாம்பரம் நீதிமன்றம் 'வாரன்ட்' பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.கடந்த 2019ல், காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பார்த்திபன் தாக்கப்பட்டது தொடர்பாக, தாம்பரம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடக்கிறது. இவ்வழக்கில், இன்ஸ்பெக்டர் பிரவீன் ராஜேஷ் சாட்சி சொல்ல வேண்டி உள்ளது. இதற்காக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்துள்ளார். இதனால், தாம்பரம் நீதிமன்றம், நாளை மறுநாள் அவர் நேரில் ஆஜராக வேண்டும் என, 'வாரன்ட்' பிறப்பித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !