சென்னை : ''வேளாண் பொருட்களை சேமித்து வைக்க, 105.47 கோடி ரூபாய் செலவில், மாநிலம் முழுவதும், 1,166 கிடங்குகள் கட்டப்படும். இதன் மூலம், ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 300 டன் அளவுக்கு கூடுதல் சேமிப்பு வசதி ஏற்படுத்தப்படும்,'' என, முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
சட்டசபையில் விதி எண், 110ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது: இந்தாண்டு உணவு தானிய உற்பத்தியில் 115 லட்சம் டன் என்ற உயரிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வேளாண் உற்பத்தியை அதிகரிப்பது மட்டுமல்லாது, வேளாண் பெருமக்கள் விளைவித்த பொருட்களுக்கு நியாயமான விலை கிடைத்து, அவர்களது தனி நபர் வருமானம் உயரும் வகையில் திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகிறது.
மாநிலத்தில், வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றில் மொத்தம், 8 லட்சம் டன் கொள்ளளவில் சேமிப்பு கிடங்கு வசதி உள்ளது. அறுவடை காலங்களில் வேளாண் விளைபொருட்கள் விலை வீழ்ச்சியடையும் போது, விவசாயிகள் விளைபொருட்களை கிடங்கில் சேமித்து வைத்து, தானிய ஈட்டுக் கடன் பெறுவதுடன், விலை ஏற்றத்தின் போது நல்ல விலைக்கு விற்கின்றனர்.
நடப்பு ஆண்டில், 185 ரூபாய் அளவிற்கு தானிய ஈட்டுக் கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, 'நபார்டு' வங்கியின் ஊரக கட்டமைப்பு மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் கடன் உதவி பெற்று, 105.47 கோடி லட்சம் ரூபாய் செலவில், மாநிலம் முழுவதும் 1,166 கிடங்குகள் கட்டப்படும். இதன் மூலம், ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 300 டன் அளவுக்கு கூடுதல் சேமிப்பு வசதி ஏற்படுத்தப்படும். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.