உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காஞ்சியில் கிடைத்த 16 சிலைகள்; மூன்றாண்டாக நீடிக்குது மர்மம்

காஞ்சியில் கிடைத்த 16 சிலைகள்; மூன்றாண்டாக நீடிக்குது மர்மம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில் நகை பாதுகாப்பு அறையில், எந்த ஆவணங்களும் இன்றி கிடைத்த 16 சிலைகள் குறித்த மர்மம், மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நீட்டிக்கிறது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு விசாரணையிலும் எந்த முன்னேற்றமும் இல்லாததால், ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் விழிபிதுங்கி நிற்கின்றனர்.காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், 2020 அக்டோபரில் நடந்த நகை சரிபார்ப்பு பணியின்போது, கோவில் நகை அறையில், உலோகத்திலான சண்டிகேஸ்வரர், மாரியம்மன், இளையான்குடி நாயனார் உட்பட, 16 சுவாமி சிலைகள் மற்றும் ஒரு திருவாச்சி இருந்தது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த கோவில் நிர்வாகிகள் ஆய்வு செய்ததில், அவை பற்றிய எந்த ஆவணமும் இல்லை என்பது தெரியவந்தது. சிலைகளை புகைப்படம் எடுத்து, அவற்றின் விபரம் மற்றும் அறிக்கையை, ஹிந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு, அப்போதைய கோவில் செயல் அலுவலர் அனுப்பி வைத்தார்.அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவிலில், 16 உலோக சிலைகள் மற்றும் ஒரு திருவாச்சி ஆகியவை இருந்தன. தொழில்நுட்ப அலுவலர், நுண்ணறிவு தொழில்நுட்ப அலுவலர், அறநிலையத் துறை சரக ஆய்வாளர் ஆகியோர் முன்னிலையில் அளவீடு செய்யப்பட்டு, எடை போட்டு, புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகள் கோவில் நகை அறைக்குள் வந்தது குறித்து, எந்த விபரமும் அறிய முடியவில்லை. இக்கோவிலில், நீண்டகாலமாக வழிபாட்டில் உள்ள, 105 சிலைகள் மட்டுமே, தொல்பொருள் துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளன.மத்திய தொல்பொருள் ஆய்வுத் துறைக்கு புகைப்படங்களை அனுப்பி, அவர்கள் ஆய்வு செய்து பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும். ஆய்வு மேற்கொள்ளும் வரை, கோவிலிலேயே சிலைகள் பாதுகாப்பாக வைத்திருக்க அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.இந்த விவகாரம் வெளியே தெரிந்தபின், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், ஏகாம்பரநாதர் கோவிலில் ஆய்வு நடத்தினர். இது தொடர்பாக, வெங்கட்ராமன் என்பவர் அளித்த புகாரின்படி, 12 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். மூன்று ஆண்டுகளாகியும், விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதனால், ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் விழிபிதுங்கி நிற்கின்றனர்.'இந்த விவகாரத்தில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், தீவிர விசாரணை நடத்தினால் மட்டுமே, சிலைகள் எங்கிருந்து, யார் வாயிலாக ஏகாம்பரநாதர் கோவிலுக்குள் வந்தது குறித்து அறிந்து கொள்ள முடியும். மத்திய தொல்பொருள் ஆய்வுத் துறையும் ஆய்வு நடத்தவில்லை' என, பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இதுகுறித்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி., சிவகுமாரிடம் கேட்டபோது, “ஐ.ஜி.,யிடம் இதுபற்றி கேட்டுவிட்டு பின் தெரிவிக்கிறேன்,” என்றார். சிலைகள் பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். அதுபற்றி வேறு எதுவும் தெரிவிக்க இயலாது. போலீசார் கேட்கும் விபரங்களை நாங்கள் அளிக்கிறோம்.- முத்துலட்சுமி,ஏகாம்பரநாதர் கோவில் செயல் அலுவலர்,காஞ்சிபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ஆரூர் ரங்
டிச 31, 2024 11:30

இன்று வரை மாநிலத்திலுள்ள எல்லா ஆலய விக்கிரகங்களின் முழு விவரங்களையும் ஆவணப்படுத்தவில்லை. இதனால் திருட்டுப் போன விக்கிரகங்கள் அந்நிய நாடுகளில் கிடைக்கும் போது அவற்றுக்கான ஆதாரங்களை புதுச்சேரி பிரெஞ்சு இன்ஸ்டிடியூடிடமிருந்து கெஞ்சிக் கூத்தாடி பெற்று அனுப்ப வேண்டியுள்ளது. ஆலய வருமானத்திலிருந்து நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் தணிக்கை கட்டணம் என வசூலிக்கும் அறம் இல்லாத துறை இது பற்றி ஒன்றும் உருப்படியாக செய்வதில்லை. எல்லா ஆலயங்களின் சொத்து விவரங்களையும் கொடுங்கள் என்றாலும் செயல்படுத்தவில்லை. மூன்றரை லட்சம் ஏக்கரிலிருந்து ஆண்டுக்கு நூறு கோடி மட்டுமே வருமானமாக கிடைக்கிறதா?. மீதி?.


Barakat Ali
டிச 31, 2024 08:27

ஆட்டயப்போட எங்களுக்கு கோவில்களில் இருந்து பலவித வருமானங்கள் தேவை ..... சிலைகள் பற்றிய கவலை எங்களுக்குத் தேவையில்லை ....


முக்கிய வீடியோ