உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  சென்னையில் 24 மணி நேர ஸ்பீடு போஸ்ட் சேவை அறிமுகம்

 சென்னையில் 24 மணி நேர ஸ்பீடு போஸ்ட் சேவை அறிமுகம்

சென்னை: ''தனியார் நிறுவனங்களுக்கு இணையாக, தபால் துறை சார்பில், நாளை முதல் ஆறு நகரங்களில், 24 மற்றும் 48 மணி நேரத்திற்குள், பார்சல்கள் மற்றும் தபால்களை, 'டெலிவரி' செய்யும் வசதி அறிமுகமாக உள்ளது,'' என, மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் தொடர்பு துறை இணை அமைச்சர் சந்திரசேகர் பெம்மசானி தெரிவித்தார்.

முதல் இடம்

தமிழக தபால் துறை சா ர்பில், 'கிராம அஞ்சல் சேவகர்கள் மாநாடு' சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று நடந்தது. இதில், தபால் துறை சேவையில் சிறப்பாக பணியாற்றிய, 10 ஊழியர்களுக்கு, மத்திய அமைச்சர் சந்திரசேகர் பெம்மசானி விருதுகள் வழங்கினார். அதன்பின், அவர் அளித்த பேட்டி: கடந்த காலங்களில், இரண்டு சதவீதமாக இருந்த தபால் துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சி, நடப்பாண்டில், 18 சதவீதமாக உயர்ந்து உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை, தபால் துறையின் வருவாய் நடப்பாண்டு, 17 முதல் 18 சதவீதம் வளர்ச்சி அடைந்து உள்ளது. நாட்டில் குக்கிராமங்கள் முதல் பெரு நகரங்கள் வரை, தபால் துறை வினியோக சேவையில், முதல் இடத்தில் உள்ளது. பார்சல் சேவை என்ற, 'கூரியர்' வினியோகத்தில், தனியார் நிறுவனங்களுடன் போட்டியிடும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கண்காணிக்கும் வசதி

நாளை முதல் சென்னை உட்பட நாட்டில் ஆறு மெட்ரோ நகரங்களில், 24 மணி நேரம் மற்றும், 48 மணி நேர, 'ஸ்பீடு போஸ்ட்' சேவை அறிமுகமாகிறது. இதன் வாயிலாக, 24 மற்றும் 48 மணி நேரத்திற்குள், பார்சல்கள் மற்றும் தபால்கள் உரியவரிடம் சேர்க்கப் படும். குறிப்பிட்ட நேரத்திற்குள் சேர்க்கப்படவில்லை எனில், கட்டணம் திருப்பி செலுத்தப்படும். இந்த சேவையில், எஸ்.எம். எஸ்., வாயிலாக கண்காணிக்கும் வசதி, யு.பி.ஐ., வழியே பணம் செலுத்தும் வசதி, ஓ.டி.பி., முறையில் டெலிவரி செய்வது, 'ஜியோ - டேக்' எனப்படும் வீட்டு வாசலில் பொருள்கள் வழங்கும் போது கண்காணிக்கும் வசதி உள்ளிட்டவை, அறிமுகம் செய்யப்பட உள்ள ன. இதனால், தனியார் நிறுவனங்களுடன் போட்டியிடும் திறன், தபால் துறைக்கு உருவாகும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை