கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் மேலும் 3 பேர் கைது
சென்னை : கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில், மேலும் மூன்று பேரை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்தனர்.கோவை உக்கடம், கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், 2022 அக்., 23ல், அதே பகுதியை சேர்ந்த, ஐ.எஸ்., பயங்கரவாதி ஜமேஷா முபின், தற்கொலை படையாக மாறி, கார் குண்டு வெடிப்பு நடத்தி பலியானார். இச்சம்பவம் குறித்து, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து, 15 பேரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கில், கோவை மாவட்டத்தை சேர்ந்த அபு ஹனிபா, சரண் மாரியப்பன், பவாஸ் ரஹ்மான் ஆகியோரை, நேற்று கைது செய்தனர். இதனால், கைது எண்ணிக்கை, 18 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில், 14 பேர் மீது என்.ஐ.ஏ., அதிகாரிகள், சென்னை பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில், ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.தற்போது கைதாகி உள்ள அபு ஹனிபா, கோவை அரபு கல்லுாரியில் ஆசிரியராக பணியாற்றி உள்ளார். அவர், ஜமேஷா முபின் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு ரகசிய வகுப்பில், பயங்கரவாத பயிற்சி அளித்துள்ளார். மூவரும் ஜமேஷா முபின் வலது கரமாக செயல்பட்டுள்ளனர். சரண் மாரியப்பன், பவாஸ் ரஹ்மான் ஆகியோருக்கு, சதி திட்டம் தொடர்பாக பணம் கைமாறியது, விசாரணையில் தெரிய வந்துள்ளதாக, என்.ஐ.ஏ., அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.