ஆய்வு அச்சத்தில் மூடப்பட்ட 300 பட்டாசு ஆலைகள்
சிவகாசி : விருதுநகர் மாவட்டத்தில், பசுமை தீர்ப்பாயம் உத்தரவின்படி பட்டாசு ஆலைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளதால், 300 பட்டாசு ஆலைகள் மூடப்பட்டன.விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், சிவகாசி, சாத்துார், வெம்பக்கோட்டை பகுதிகளில் நாக்பூர், சென்னை, டி.ஆர்.ஓ., உரிமம் பெற்ற 1,080 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன.இவற்றில் நேரடியாக 3 லட்சம் பேர், மறைமுகமாக 5 லட்சம் பேர் வேலை செய்கின்றனர். 30 பேர் மரணம்
இம்மாவட்டத்தில் சமீபமாக தொடர் வெடி விபத்து ஏற்பட்டு, தொழிலாளர்கள் பலியாகும் நிலை உள்ளது. 2025ல் ஏழு மாதங்களில் மட்டும், 14 வெடி விபத்துகளில், 30 பேர் உயிரிழந்துள்ளனர்; 26 பேர் காயமடைந்துள்ளனர்.இம்மாவட்டத்தில், பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்ந்து ஏற்பட்டு வரும் நிலையில், 'இனி ஒரு பட்டாசு ஆலை வெடி விபத்து கூட நடக்கக் கூடாது' என, பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.மேலும், '10 நாட்களுக்குள் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆலைகளையும் ஆய்வு செய்ய வேண்டும்' எனவும் உத்தரவிட்டுள்ளது.'பட்டாசு ஆலைகளில் விதிமீறல் இருந்தால், ஆலையை மூடுவது குறித்து அதிகாரிகள் முடிவு எடுக்கலாம்' எனவும் பசுமை தீர்ப்பாயம் அறிவித்துள்ளது. வேலை இழப்பு
இதையடுத்து, மாவட்டத்தில் உள்ள அனைத்து பட்டாசு ஆலைகளிலும் ஆய்வு செய்ய, கலெக்டர் சார்பில் 15 ஆய்வு குழுக்கள், மத்திய வெடிபொருள் பெட்ரோலியம் கட்டுப்பாட்டு அலுவலகமான பெசோ சார்பில் மூன்று குழுக்கள் நியமிக்கப்பட்டு, இன்று முதல் ஆய்வு நடைபெற உள்ளது.இந்நிலையில், சிவகாசி, வெம்பக்கோட்டை, எம்.புதுப்பட்டி, நாரணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் 300 பட்டாசு ஆலைகள், ஆய்வு அச்சத்தால் மூடப்பட்டுள்ளன. ஆலைகளில் விதிமீறல் இருந்தால் உடனடியாக உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதால், பட்டாசு ஆலைகளை மூடி உள்ளதாக தெரிகிறது.இதனால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். ஏற்கனவே, 80க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு இயங்காத நிலையில், தற்போது, 300 ஆலைகள் வரை மூடப்பட்டுள்ளதால், வரும் தீபாவளிக்கு பட்டாசு பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது.