மது அருந்தும் இடத்துக்கு குழந்தைகளை அனுமதித்தால் நடவடிக்கை: ஐகோர்ட்
சென்னை: 'புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது, நட்சத்திர ஹோட்டல்கள், உணவு விடுதிகளில், மதுபானம் அருந்தும் இடத்துக்கு, குழந்தைகள் அழைத்து செல்லப்படுவதாக புகார் வந்தால், உடனே விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவேற்காடு பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் எம்.காமேஷ் தாக்கல் செய்த மனு:
சென்னை எழும்பூரில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில், கடந்தாண்டு டிசம்பர், 31ம் தேதி புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, மது அருந்தும் இடத்துக்கு குழந்தைகள் அழைத்து வரப்பட்டனர். இந்தச் செயல் சட்டப்படி தவறானது; சிறார் நீதிச் சட்டத்துக்கும் எதிரானது. மது அருந்தும் இடத்தில் குழந்தைகளை அனுமதித்த, தனியார் நட்சத்திர ஹோட்டலுக்கு எதிராக நடவடிக்கை தேவை. புத்தாண்டு நெருங்கும் நிலையில், நட்சத்திர ஹோட்டல்கள், விடுதிகளில் நடக்கும் புத்தாண்டு கொண்டாட்டங்களில், மது அருந்தும் இடங்களில் குழந்தைகள் கலந்து கொள்ளவில்லை என்பதை உறுதி செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். இந்த மனு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் எம்.செந்தில்குமார், ஆர்.எஸ்.தமிழ்வேந்தன் ஆஜராகி, 'இனிவரும் காலங்களில், சிறார்களை மது அருந்தும் இடத்துக்கு, நட்சத்திர ஹோட்டல், விடுதிகள் அனுமதிப்பதை தடுக்கும் வகையில், வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும்' என்றனர். இதன்பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
எதிர்வரும் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, நட்சத்திர ஹோட்டல்கள், உணவு விடுதிகளில், மதுபானம் அருந்தும் இடத்துக்கு, குழந்தைகள் அழைத்து செல்வதாக புகார்கள் வந்தால், உடனே விசாரணை செய்து, அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டத்துக்கு மாறாக, நட்சத்திர விடுதிகள், ஹோட்டல்களில் மதுபானம் அருந்தும் இடத்துக்கு குழந்தைகள் அனுமதிக்கப்படுவது தொடர்பாக, மனுதாரருக்கு தகவல் தெரிந்தால், அதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளிக்கலாம். இவ்வாறு உத்தரவிட்டனர்.