உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னை வெள்ளத்தடுப்பு பணிக்கு பயன்படும் வேளாண் டிராக்டர்கள்; உழவுக்கு கிடைக்காமல் விவசாயிகள் அவதி

சென்னை வெள்ளத்தடுப்பு பணிக்கு பயன்படும் வேளாண் டிராக்டர்கள்; உழவுக்கு கிடைக்காமல் விவசாயிகள் அவதி

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ள தடுப்பு பணிக்கு, வேளாண் பொறியியல் துறை டிராக்டர்கள் பயன்படுத்தப்படுவதால், சாகுபடிக்கு தயாராகும் விவசாயிகள், டிராக்டர் கிடைக்காமல், அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

குறைந்த வாடகை

வேளாண் தொழிலாளர்கள் பற்றாக்குறையால், விவசாயம் பாதிக்கப்படுவதை தடுக்கவும், உணவு உற்பத்தியை பெருக்கவும், வேளாண் பொறியியல் துறை சார்பில், வேளாண் இயந்திர மயமாக்கல் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், விவசாயிகள் உழவு, நடவு, களையெடுப்பு, பயிர் மேலாண்மை, அறுவடை, பயிர்க்கழிவு மேலாண்மை போன்ற பணிகளை செய்வதற்கு, 'டிராக்டர், பவர் டிரில்லர்'கள், நெல் அறுவடை இயந்திரம், நாற்று நடும் இயந்திரம் என, 100 வகையான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள், குறைந்த வாடகைக்கு வழங்கப்படுகின்றன.

800 ரூபாய்

இதற்காக, 316 இடங்களில், வாடகை இயந்திர மையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில், 613 டிராக்டர்கள், 2,161 டிராக்டர்களுக்கான இணைப்பு கருவிகள், ஒரு மணி நேரத்திற்கு, 800 ரூபாய் என, வாடகைக்கு வழங்கப்படுகின்றன. வடகிழக்கு பருவமழையை பயன்படுத்தி, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலுார், திருப்பத்துார், விழுப்புரம், கடலுார், ராணிப்பேட்டை உள்ளிட்ட வட மாவட்டங்களில், விவசாயிகள் சாகுபடிக்கான ஏற்பாடுகளில், கவனம் செலுத்த துவங்கி உள்ளனர். இதற்காக நிலத்தை உழவு செய்தல், பாசனம் உள்ளிட்ட பணிகளுக்கு, வேளாண் பொறியியல் துறையின் டிராக்டர்களை எதிர்பார்க்கின்றனர். ஆனால், வேளாண் பொறியியல் துறையிடம் டிராக்டர்கள் இல்லை என, அதிகாரிகள் கை விரிக்கின்றனர். 'உழவன்' செயலியிலும் வாடகை டிராக்டர்கள் குறித்த விபரம் அகற்றப்பட்டு உள்ளது.

சாகுபடி பாதிப்பு

சென்னையில் வடகிழக்கு பருவ மழையின்போது, வெள்ள நீரை வெளியேற்ற, மாநகராட்சி சார்பில், டிராக்டர்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. இதற்காக, பல்வேறு மாவட்டங்களில் இருந்து, வேளாண் பொறியியல் துறையின் டிராக்டர்கள் எடுத்து வரப்பட்டு, ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதனால், சாகுபடிக்கு தேவையான பணிகளை, குறித்த நேரத்தில் மேற்கொள்ள முடியாமல், விவசாயிகள் தவித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி