அக்ஷயா மேலாண்மை கல்லூரி துவக்கம்
கோவை: ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள 'அக்ஷயா இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ்' கல்லூரி துவக்க விழா நடந்தது. கல்லூரி தலைவர் நாகராசன் தலைமை வகித்தார். கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். கல்லூரியை துவக்கி வைத்து, சென்னை, டாக்ஷாப் அகடமியின் முதன்மை நிர்வாக அதிகாரி கோபிநாத் பேசியதாவது: லஞ்சம் கொடுப்பது, நமது குடும்பத்தில் இருந்துதான் துவங்குகிறது. இதனை தவிர்த்தாலே, ஊழலற்ற சமுதாயம் உருவாகும். தொடர்புத்துறையில் பெண்கள் சிறந்து விளங்க காரணம், குடும்பத்தில் பெண் குழந்தைகளுக்கு கிடைக்கும் சுதந்திரமே. ஒரு குடும்பத்தில் ஆண் குழந்தை தனக்கு தேவையானதை தனது தாயிடம் கூறியே பெற்றுக் கொள்ள இயலும். அங்கு, தந்தை நிர்வாக பொறுப்பில் இருந்தாலும், தாயின் பரிந்துரை தேவைப்படுகிறது. அதே நேரத்தில் பெண் குழந்தை, தந்தையிடம் நேரடியாக சென்று கேட்கும். தற்போது ஊழலு<க்கு எதிரான போராட்டம் துவங்கியுள்ளது. இப்போராட்டம் நல்லதொரு முடிவை எட்டவேண்டும். அதற்கு, மக்கள் ஜன்லோக்பால் குறித்த விபரங்களை தெரிந்திருத்தல் அவசியம். நமக்குள்ள உரிமைகளை தெரிந்து,நேரத்தை சரியான முறையில் பயன்படுத்தினாலே வாழ்வில் வெற்றி பெற இயலும். முயற்சிகளை மேற்கொள்ள தயங்கினால், வெற்றி கிட்டாது. மேலாண்மைத்துறையில் பயில்வோர், தொழில்முனைவோராக மாற வேண்டும். இவ்வாறு, கோபிநாத் பேசினார்.திறன் வளர்ப்பு குறித்த பயிற்சிகளை மேற்கொள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம், டாக்ஷாப் அகடமி மற்றும் அக்ஷயா கல்லூரியிடையே கையெழுத்தானது. கல்லூரி மலரை கோபிநாத் வெளியிட, கோழிக்கோடு ஐ.ஐ.எம்.,மின் பேராசிரியர் ரமேஷ் பெற்றுக்கொண்டார். சென்னை டிரிமென்டஸ் டெக்õனலஜிஸ் நிறுவனத்தின் ரவிச்சந்திரன் உள்பட பலர் பேசினர். கல்லூரி நிர்வாக அறங்காவலர் முருகையா, செயலாளர் ரங்கராஜ் மற்றும் மகேஷ்குமார், பானுமதி, கீதா உள்பட பலர் பங்கேற்றனர். பேராசிரியர் ஷானி நன்றி கூறினார்.