| ADDED : அக் 26, 2024 12:33 PM
சென்னை: சென்னை, ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் முதல்வர் ஸ்டாலினை கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்து பேசினர். சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்ததற்காக நன்றி தெரிவித்ததாக கூட்டணி கட்சி தலைவர்கள் நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தனர்.காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கி வரும் சாம்சங் தொழிற் சாலையில், சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம் அமைப்பது, ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி, 37 நாட்களாக போராட்டம் நடத்தினர். பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையிலான பேச்சுக்கு பின், வேலைநிறுத்தப் போராட்டத்தை, சி.ஐ.டி.யு., முடித்துக் கொண்டது. சமீபத்தில், சாம்சங் தொழிலாளர்கள் வழக்கம்போல பணிக்கு திரும்பினர். இது தொடர்பாக, சென்னை, ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் முதல்வர் ஸ்டாலினை கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்து பேசினர். இது குறித்து, மார்க்சிஸ்ட் கட்சி செயலர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனி., மாநில செயலாளர் முத்தரசன், வி.சி.க., தலைவர் திருமாளவன் உள்ளிட்டோர் நிருபர்கள் சந்தித்து பேசினர்.'37 நாட்கள் போராட்டம் நடத்தி வந்த தொழிலாளர்கள் பிரச்னைக்கு முதல்வர் ஸ்டாலின் சுமூக தீர்வு கண்டார். சங்கம் அமைப்பது தொடர்பான பிரச்னை நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. விரைந்து தீர்க்க கோரி உள்ளோம்' என மார்க்சிஸ்ட் கட்சி செயலர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.'4 அமைச்சர்களை அனுப்பி பேச்சு நடத்தி முதல்வர் ஸ்டாலின் சுமூக தீர்வு கண்டார். தமிழகத்துக்கு தொழிற்சாலைகளும், தொழிலாளர்களும் இரண்டு கண்கள் போன்றது. எங்கள் கோரிக்கைகளை தீர்த்து வைப்பதாக முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்தார்' என இந்திய கம்யூ., மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.