என் பெயரை தவறான நோக்கத்துடன் பயன்படுத்தியோர் மீது நடவடிக்கை: அன்னுார் போலீசில் அண்ணாமலை புகார்
அன்னுார்;'பணம் கேட்டு மிரட்டியவர்களுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனது பெயரை தவறான நோக்கத்துடன் பயன்படுத்தியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழக பா.ஜ. முன்னாள் தலைவர் அண்ணாமலை அன்னுார் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம், அன்னுார் குமாரபாளையத்தைச் சேர்ந்த அருணாசலம் என்பவர் சமூக வலைதள பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பா.ஜ., நிர்வாகி ஒருவர் உள்பட மூன்று பேர், தங்கள் குடும்பத்திடம் அண்ணாமலை பெயரை பயன்படுத்தி, பணம் கேட்டு மிரட்டுவதாக தெரிவித்து இருந்தார். இதை தொடர்ந்து தமிழக பா.ஜ. முன்னாள் தலைவர் அண்ணாமலை சார்பில் மறுப்பு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை, அவரது செயலர் தமிழ் இளங்கோ வாயிலாக, அன்னுார் போலீசில் அளித்த புகார் மனு: இந்த குறிப்பிட்ட நிகழ்வுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. என் கவனத்திற்கு வந்த செய்திகள் குறித்து உரிய விசாரணை செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க உதவ வேண்டும். அதே சமயம் எனது பெயரை தவறான நோக்கத்துடன் பயன்படுத்தியது தெரிய வந்தால், அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார். அண்ணாமலையின் புகார் மனுவை அவரது செயலர், அன்னுார் போலீசில் கொடுத்து பல மணி நேரம் ஆகியும் மனு ஏற்பு ரசீது தராமல் இழுத்தடித்தனர் என அவரது வழக்கறிஞர்கள் புகார் தெரிவித்தனர்.